தடையை மீறி கிராம சபை கூட்டம்.. ஸ்டாலின் மீது சட்டப்படி நடவடிக்கை பாயும் - திருவள்ளூர் எஸ்.பி
அரசின் உத்தரவை மீறி கிராம சபை கூட்டத்தில் பங்கேற்ற திமுக தலைவர் ஸ்டாலின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர்: கிராம சபை கூட்டங்கள் நடத்த அரசு தடை விதித்துள்ள நிலையில் தடையை மீறி கிராம சபை கூட்டத்தில் பங்கேற்ற திமுக தலைவர் ஸ்டாலின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவல் காரணமாக கிராம சபை கூட்டம் நடத்த அரசு தடை விதித்தது. தடையை மீறி பல ஊர்களில் திமுகவினர் கிராம சபை கூட்டங்களை நடத்தினர். இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி ஒன்றியம் கொரட்டூர் ஊராட்சியில் திமுக சார்பில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், மத்திய அரசு அறிவித்த வேளாண் திருத்த சட்டத்தை உடனடியாக திரும்பப்பெற கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என நாம் கேட்டுக்கொண்டோம். இதனால் தமிழக அரசையோ மத்திய அரசையோ கண்டித்து தீர்மானம் இருக்கக்கூடாது ஆட்சிக்கு எதிராக தீர்மானம் இருக்கக்கூடாது அரசியல் பேசக்கூடாது என ஆட்சியர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது என்று தெரிவித்தார்.
கொரோனாவை பார்த்து பயப்படுவதை விட திமுகவை கண்டு எடப்பாடி பழனிச்சாமி பயப்படுகிறார் என்றும் தெரிவித்தார். ஊர் ஊராக செல்லும் எடப்பாடி பழனிச்சாமி எதனடிப்படையில் செல்கிறார் ஷோ செய்கிறார் என்றும் குற்றம் சாட்டினார். அதிமுக நடத்திய செயற்குழு கூட்டத்தில் 100கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். அங்கு கொரோனா பரவாதா? என்றும் அது கபட நாடகம் என்றும் பேசினார்.
ஆன்லைன் வர்த்தகம், கார்ப்பரேட் நிறுவனங்கள் விவசாயிகளை அடிமையாக்குகிறது,நெல்லுக்கு உரிய விலை இல்லை, விற்பனை கூடம் மூடல், உழவர் சந்தை மூடல்,விலைவாசி உயர்வு என அதிமுக ஆட்சி நடைபெறுவதாகவும் தெரிவித்தார். இந்தியா முழுவதும் விவசாயிகள் எதிர் கட்சிகள் போராட்டம் நடத்துகின்றன என்றும், பாஜக ஆட்சி செய்யும் கர்நாடகா, கூட்டணி கட்சி ஆட்சி பஞ்சாப், ஆந்திரா,கேரளா போன்ற மாநிலங்களிலும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
கொரோனாவை விட திமுகவை பார்த்து அரசு அஞ்சுகிறது - கிராமசபை கூட்டத்தில் ஸ்டாலின் பேச்சு
வேளாண் சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் இல்லையென்றால் திரும்பபெறும் வரை போராட்டம் தொடரும் என்றும் எச்சரித்தார். அரசின் உத்தரவை மீறி திமுக தலைவர் ஸ்டாலின் கூட்டத்தில் கலந்து கொண்டதால் காவல்துறை சார்பில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் தெரிவித்துள்ளார்.