தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கா? ? சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி
திருவள்ளூர்: தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதாக பரவும் வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என்று தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்ட பின்னர் தமிழகத்தில் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், சேலம் உள்ளிட்ட வட மாவட்டங்களிலும், கோவை, திருப்பூர், சேலம், ஈரோடு உள்ளிட்ட கொங்கு மாவட்டங்களில் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது.
திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு முன்பைவிட குறைந்துள்ளது. தற்போது திருவள்ளூர் மாவட்டத்தில் 1697 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சைப் பெற்று வருகிறார்கள்.
அமெரிக்கா, பிரேசிலில் குறைந்து வரும் கொரோனா உயிரிழப்பு.. இந்தியாவில் மட்டும் கிடுகிடு
திருவள்ளூர் மாவட்டத்தில் ஆய்வு
தமிழக அரசு. பொதுமக்கள் முககவசம் அணிவதை கட்டாயமாக்க உத்தரவிட்டுள்ளது. இதுபற்றி கண்காணிக்க திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் தமிழக சுகாதார துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் நேற்று ஆய்வு செய்தார். அவருடன் திருவள்ளூர் கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் வந்தனர்.
சமூக இடைவெளி அவசியம்
அப்போது செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. பொதுமக்கள். முகக்கவசத்தை கட்டாயம் அணிய வேண்டும். பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். ஆனால் மக்கள் அதை கடைபிடிக்கவில்லை.
மருத்துவ பரிசோதனை
அரசின் விதிமுறைகளை பின்பற்றாததால் தமிழகத்தில் இதுவரை 50 ஆயிரம் பேரிடம் 1.50 கோடி ரூபாய் வரை அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது. அதேபோல், ஆரம்பத்தில் மருத்துவப் பரிசோதனையில் 15 முதல் 20 விழுக்காடு தொற்று பாதிப்பு உறுதியாகி வந்தது. தற்போது 10க்கும் கீழ் பாதிப்பு குறைந்து உள்ளது..
பொதுமக்கள் நம்ப வேண்டாம்
திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு போன்ற மாவட்டங்களில் தொற்று பாதிப்பு குறைந்திருந்தாலும், கோவை, சேலம், திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி போன்ற மாவட்டங்களில் தொற்று பாதிப்பு அதிகமாகி வருகிறது. சிறப்பு மருத்துவ முகாம் அமைத்து தீவிர சிகிச்சையின் மூலம் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அடுத்ததாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என வாட்ஸ் ஆப்பில் வரும் வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம்" இவ்வாறு கூறினார்.‘