கனமழை... தத்தளிக்கும் பூந்தமல்லி.. நசரத் பேட்டையில் 500 குடும்பங்கள் தவிப்பு
பூவிருந்தவல்லி : திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லி அருகே உள்ள நசரத் பேட்டை குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்ததால் சுமார் 500 குடும்பங்கள் செய்வதறியாது தவித்து வருகின்றன.
Recommended Video
பூவிருந்தவல்லி சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் மழை காரணமாக மழைநீர் வெளியேற வழியில்லாமல நசரத் பேட்டையில் சூழ்ந்துள்ளது. குடியிருப்புகளை சூழ்ந்துள்ள தண்ணீரை உடனடியாக அகற்ற பூவிருந்தவல்லி நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தென்மாவட்டங்களில் இன்று மிக கனமழை... மழை படிப்படியாக குறையுமாம் - புவியரசன் தகவல்
கனமழை, வெள்ளம்
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரி, ஆந்திராவில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஏரிகள் அனைத்தும் நிரம்பிவிட்டன. இதுமட்டுமின்றி ஆந்திராவில் உள்ள அணைகளும் நிரம்பி உள்ளதால் அங்கிருந்து வெளியேறும் உபரிநீர் சென்னை வந்து கொண்டிருக்கின்றன. இதனால் செம்பரம்பாக்கம், பூண்டி, புழல் ஏரிகளில் இருந்து உபரிநீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகிறது.
வரலாறு காணாத மழை
கடந்த 200 ஆண்டுகால மழை வரலாற்றை இந்த ஆண்டு பெய்த மழை முறியடித்துள்ளதாக தெரிவித்துள்ள வானிலை வல்லுநர்கள், சென்னையில் மட்டும் இதுவரை 100 செ.மீ. க்கு மேல் மழை பொழிந்துள்ளதாக கூறுகின்றனர். ஆனாலும் சென்னையை பொறுத்தவரை படிப்படியாக மழை குறைய வாய்ப்பு இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக கடந்த 2015ம் ஆம் ஆண்டை போலவே சென்னை நகரம் வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது.
பூவிருந்தவல்லி அருகே தண்ணீர்
இதற்கிடையே திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் நசரத்பேட்டைக்கு உட்பட்ட யமுனா நகரில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் முடங்கி கிடக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. யமுனா நகரில் சுமார் 500 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் அத்தியாவசிய தேவைகளுக்காகக் கூட வீட்டை விட்டு வெளியில் வரமுடியாமல் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். இதனால் இங்கிருக்கும் இளைஞர்கள் சிலர் படகு ஒன்றை ஏற்பாடு செய்து தங்களால் முடிந்தவரை பொதுமக்களுக்கு உணவுப் பொருட்கள் வாங்கிக் கொடுப்பது உள்ளிட்ட உதவிகளை செய்து வருகின்றனர்.
மருத்துவக் குழு தேவை
மேலும் மழைநீருடன், கழிவுநீரும் கலந்து வருவதால் துர்நாற்றம் வீசுவதாக இப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். மேலும் இதனால் தொற்றுநோய் பரவும் அபாயம் இருப்பதாகவும், குழந்தைகள் காய்ச்சலால் அவதிபட்டு வருவதாகவும் வேதனை தெரிவித்துள்ளனர். இந்த மோசமான நிலை கடந்த 10 நாட்களாக நீடிப்பதாக தெரிவிக்கும் பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள தண்ணீரை அகற்ற அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் மருத்துவக் குழுக்களை அனுப்பி இங்கிருக்கும் குழந்தைகள், முதியவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து பொதுமக்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்க வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.