பணப்பட்டுவாடா நடக்குது.. அதான் இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை.. கமல்ஹாசன் தாக்கு
திருவள்ளூர்: பணப்பட்டுவாடா நடப்பதால்தான் இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை என கமல்ஹாசன் தெரிவித்தார்.
நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் கிராம சபை கூட்டம் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தி வருகிறார்.
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இன்று நாடு முழுவதும் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.
இதற்காக அவர் 'கிராம சபை மட்டுமல்லாது, நகர சபை கூட்டங்களையும் நடத்த வேண்டும்' என கோரிக்கை விடுத்து இருந்தார். அந்த அழைப்பின்பேரில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, தமிழகம் முழுக்க கிராம சபை கூட்டங்கள் நடக்க உள்ளன.
அழைப்பு
இதில், அனைவரும் திரளாக பங்கேற்க வேண்டும்' என, அழைப்பு விடுத்து இருந்தார்.
இன்று காலை திருவள்ளூர் மாவட்டத்திற்குட்பட்ட பழவேற்காடு லைட் அவுஸ் குப்பம் கிராமசபை கூட்டத்தில் கமல்ஹாசன் பார்வையாளராக கலந்து கொண்டார்.
துண்டுப்பிரசுரம்
அந்த பகுதிகளின் அடிப்படை பிரச்சனைகள் குறித்த கலந்துரையாடலும் அதற்கான தீர்வுகளுக்கான முன்னெடுப்புகள் குறித்தும் விவாதிக்கப்பட்டன.
அவரது கட்சி உறுப்பினர்கள் பலரும் தமிழ்நாடு முழுக்க கிராம சபை கூட்டத்தில் பங்கேற்பதன் அவசியம் குறித்து, துண்டுப் பிரசுரம் வழங்கி, விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
உறுதி
கிராம சபை கூட்டம் முடிந்த பிறகு கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். அவர் கூறுகையில்
பணப்பட்டுவாடா நடப்பதால் இடைத்தேர்தல்களில் போட்டியிடவில்லை. பழவேற்காடு பகுதியில் மாதம் ஒருமுறை மருத்துவ முகாம் நடத்தப்படும் என்று உறுதி அளிக்கிறேன்.
1.5 கோடி
இந்த பகுதியில் அரசு மருத்துவமனை அமைத்தால் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் மருத்துவர்களை அனுப்ப தயார். பழவேற்காடு ஏரிக்கு பாதிப்பு ஏற்பட்டால் 1.5 கோடி மக்கள் பாதிக்கப்படுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.