72 குண்டுகள் முழங்க.. அரசு மரியாதையுடன் நல்லடக்கம்.. சங்கீத மேகத்தோடு கலந்த எஸ்பி. பாலசுப்பிரமணியன்
சென்னை: மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல், சென்னைக்கு அருகேயுள்ள, செங்குன்றம் பண்ணை வீட்டில் இன்று நண்பகல், நல்லடக்கம் செய்யப்பட்டது. அவருக்கு போலீசாரின் 72 துப்பாக்கி குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதை செலுத்தப்பட்டது.
"பாடும் நிலா" என ரசிகர்களால் அழைக்கப்படும் எஸ்பி பாலசுப்பிரமணியம், கொரோனா தொற்றுக்காக சென்னையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
50 நாட்களுக்கு மேலாக, சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று அவருக்கு உடல்நிலை மோசமடைந்து உயிர் பிரிந்தது. இதையடுத்து அவரது உடல் நுங்கம்பாக்கத்தில உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது.
மனிதர்களை மதிக்கும் மகான்.. டோலி தூக்குபவர்களின் காலில் விழுந்து வணங்கிய எஸ்பிபி.. வைரலாகும் வீடியோ
தாமரைப்பாக்கம் பண்ணை வீடு
அங்கு அவரது உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து கூட்டம் அதிகரித்ததன் காரணமாக அவரது உடல் செங்குன்றத்தில் உள்ள தாமரைப்பாக்கம் பண்ணை வீட்டிற்கு நேற்று இரவு கொண்டு வரப்பட்டது. பண்ணை வீட்டில் எஸ்பிபியின் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்த அனுமதியில்லை என அறிவிக்கப்பட்டது. எனினும் அவரது உடல் வந்தவுடன் ஏராளமானோர் குவிந்தனர். இதையடுத்து அதிகாலை முதல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டது.
சமூக விலகல்
எஸ்பிபியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வருபவர்களுக்கு சானிடைசர் வழங்கி சமூக விலகலுடன் அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டது. பண்ணை வீட்டில் மாந்தோப்புக்கு மத்தியில் அவரது உடலை நல்லடக்கம் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்றது.
திரைப்பிரபலங்கள்
அமைச்சர் மா.பா.பாண்டியராஜன், திரைப்பிரபலங்கள், விஜய், அர்ஜுன், மனோ, வெங்கட் பிரபு, பிரேம்ஜி, பாரதிராஜா, மயில்சாமி உள்ளிட்டோர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். எஸ்பிபி உடலுக்கு, அவரின் குடும்ப வழக்கப்படி இறுதிச் சடங்குகள் நடைபெற்றன. சடங்குகளை மகன் எஸ்பிபி சரண் செய்தார்.
24 போலீஸார்
இதையடுத்து ஆயுதப்படை போலீஸ் துணை ஆணையர் திருவேங்கடம் தலைமையில், போலீஸாரின் 72 துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் எஸ்பிபியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. 24 போலீசார் வானத்தை நோக்கி 3 முறை துப்பாக்கியால் சுட்டு மரியாதை அளித்தனர்.
எஸ்பிபியின் ஆசை
தன்னை பண்ணை வீட்டில் அடக்கம் செய்ய வேண்டும் என கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பே எஸ்பிபி தனது குடும்பத்தினரிடம் தெரிவித்திருந்த நிலையில் அவரது கடைசி ஆசை இதன் மூலம் நிறைவேறியது. சங்கீத ஜாதி முல்லை.. சங்கீத மேகத்தோடு இன்று கலந்து போனது. "இந்த தேகம் மறைந்தாலும்.. இசையாய் மலர்வேன்" என்ற பாடல் மட்டுமே அவரின் ரசிகர்களுக்கு இப்போது ஒரே ஆறுதல்.