கத்திரி முடிந்தும் உக்கிரம் காட்டும் வெயில்.. மகனுக்காக சான்றிதழ் வாங்க சென்றவர் பலியான சோகம்
திருத்தணி: முன் எப்போதும் இல்லாத வகையில் நடப்பாண்டு வெயில் மிக கடுமையாக வறுத்தெடுத்து வருகிறது. திருத்தணி அருகே வெயிலின் உக்கிரம் காரணமாக, ஒருவர் சுருண்டு விழுந்து பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கத்திரி வெயில் முடிந்து பல நாட்கள் ஆயினும் வெப்பத்தின் தாக்கம் சிறிதளவு கூட குறையவில்லை. இன்னும் சொல்ல போனால் கத்திரி வெயில் என்று சொல்லப்படும் அக்னி நட்சத்திரத்தை விட, தற்போது வெயிலின் தாக்கம் மிக அதிகமாக உள்ளது.
கடந்த இரு நாட்களாக தலைநகர் சென்னை உட்பட பல இடங்களில் காலையில் இருந்தே அனல் காற்றுடன் கூடிய வெயிலால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். தமிழகத்தில் நேற்று மட்டும் 10க்கும் மேற்பட்ட இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி பதிவாகியுள்ளது. சென்னை மற்றும் திருத்தணியில் நேற்று 108 டிகிரி வெயில் கொளுத்தியது.
கடும் வெயிலால் தமிழகத்தை சேர்ந்த 5 பேர் ரயிலில் உயிரிழந்த சோக சம்பவத்தின் சுவடு மறைவதற்குள், திருத்தணி அருகே வெயிலின் உக்கிரம் காரணமாக ஒருவர் சுருண்டு விழுந்து பலியாகியுள்ளார். வடமாநிலங்களுக்கு சுற்றுலா சென்ற 5 பேர் கடந்த 3 நாட்களுக்கு முன் வெயிலின் உக்கிரத்தை தாக்குப் பிடிக்க முடியாமல் ரயிலிலேயே பலியாகினர்
இந்நிலையில் திருத்தணியை சேர்ந்த பொதட்டூர்பேட்டை என்ற பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் என்பவர், தனது மகனை கல்லூரியில் சேர்ப்பதற்காக இருப்பிட சான்றிதழ் பெற வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்றுள்ளார். இருப்பிடம் மற்றும் வருமானம் சான்று கோரி தாசில்தார் அலுவலகத்தில் கிருஷ்ணன் விண்ணப்பித்து, 15 நாட்களுக்கு மேலானதாக கூறப்படுகிறது
இதனிடையே பள்ளிப்பட்டு தாசில்தார் அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தி நிகழ்ச்சியில் தனக்கு தேவையான சான்றுகளை வழங்க கோரி மனு கொடுக்க சென்றுள்ளார். அங்கு அதிகாரிகளை சந்திக்க முடியாததால் மரத்தடியில் பல மணி நேரம் காத்திருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக திடீரென மயங்கி சுருண்டு விழுந்து அவர் உயிரிழந்த சம்பவம், அங்கிருந்தவர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், கடலூர், திருச்சி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் 3 நாட்களுக்கு கடுமையான அனல்காற்று வீசக்கூடும் என சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. வெயிலின் தாக்கம் இன்னும் சில நாட்களுக்கு நீடிக்கும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது
எனவே பகல் நேரங்களில் குழந்தைகள், பெரியவர்கள் வீடுகளை விட்டு வெளியே வருவதை தவிர்க்கும் படியும் வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.
இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் ஹெல்மெட் மற்றும் பருத்தி ஆடைகளை அணிந்து செல்வதன் மூலம் வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து சற்று விடுபடலாம் என மருத்துவர்களும் யோசனைகளை வழங்கியுள்ளனர்.