வாவ் குட்டிப் பையா... பிஞ்சு நடை போட்டு.. நட்டு வைத்த செடிக்கு மண் அள்ளிப் போடும் ஒரு வயசு மழலை!
ஒரு வயது குழந்தை மரக்கன்று நடும் வீடியோ வைரலாகி வருகிறது
Recommended Video
திருவள்ளூர்: ஜட்டி கூட போடவில்லை.. வெறும் உடம்பு.. அந்த உடம்பெல்லாம் மண்ணு.. பிஞ்சு கையில் மரக்கன்றுக்கு மண்ணை வாரி வீசும் இந்த மழலையின் வீடியோதான் வைரலாகி வருகிறது.
திருவள்ளூர் மாவட்டம் மேலப்பேடு கிராமத்தை சேர்ந்தவர் விக்னேஸ்வரன். கவின் கலை கல்லூரி மாணவர். இவர் தனது மண்ணிற்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதற்காக தனது பகுதியில் மரங்களை நட முடிவு செய்து அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், இயற்கையை மீட்டெடுக்க சமூக வலைதளங்கள் மூலமாக பொதுமக்களுக்கு கோரிக்கை ஒன்றினை வைத்துள்ளார். அதில், "எனது பகுதியில் நடுவதற்காக 30 மர கன்றுகள் தேவைப்படுகிறது மேலும் அதனை பாதுகாக்க இரும்பு வளையங்கள் தேவைப்படுகிறது. எனவே உங்களால் முடிந்தால் எனக்கு 30 மரக்கன்றுகளை வழங்குங்கள்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும் சிறுவர்கள் உதவியுடன் மரக்கன்றுகள் நடும் வீடியோ ஒன்றையும் பதிவிட்டுள்ளார். இதில் ஒரு வயது குழந்தையும் மரக்கன்றுகளை நட உதவி செய்கிறது. அந்த குழந்தையின் பெயர் விஸ்வா. உடம்பில் ஒரு துணியும் இல்லை.. காலில் கொலுசு மட்டும் இருக்கிறது.
சிறுவர்கள் அங்கு மரக்கன்றுகளை நடுவதை பார்த்ததும் விஸ்வாவுக்கும் ஆசை வந்துவிட்டது. அதனால் மரக்கன்றுகளை அவர்களுடன் சேர்த்து பிடித்து நடுவதும், அதற்கு தன் பிஞ்சு கரங்களால் மண்ணை அள்ளி போடுவதும் என கலக்குகிறான்... சந்தோஷப்படுகிறான்.. இதை பார்த்து உடன் இருந்த மற்ற சிறுவர்களும் கைதட்டி ஆரவாரம் செய்கிறார்கள்.
ஒரு வயசு குழந்தைக்குகூட மரக்கன்று நடும் ஆசை வந்துவிட்டது... ஆனால் இதை பார்த்து மகிழ நம்முடைய கலாம் இல்லாமல் போய்விட்டாரே என்றுதான் வருத்தமாக உள்ளது!