திருநள்ளாறில் சனிப்பெயர்ச்சி விழாவில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி சாமி தரிசனம்
திருநள்ளாறில் சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு 48 நாட்கள் நடைபெறும் விழாவை கொரோனா தடுப்பு விதிகளை முழுமையாக பின்பற்றி நடத்த சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
திருநள்ளாறு: திருநள்ளாறு சனிபகவான் கோவிலில் 27ஆம் தேதி நடைபெற உள்ள சனிப்பெயர்ச்சி விழாவை கொரோனா விதிமுறைகளை பின்பற்றி குறைந்த அளவிலான பக்தர்களுடன் நடத்த முடிவு செய்துள்ளதாக புதுச்சேரி மாநில ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.
வரும் 27ஆம் தேதி ஞாயிறு கிழமை சனிப்பெயர்ச்சி நடைபெற உள்ளதை முன்னிட்டு திருநள்ளாரில் உள்ள சனீஸ்வரன் கோவிலில் அன்று முதல் பிப்ரவரி 12ஆம் தேதி வரை சனிப்பெயர்ச்சி திருவிழா நடத்த காரைக்கால் மாவட்ட ஆட்சியரும், கோவில் செயல் அலுவலரும் முடிவெடுத்தனர்.
கொரோனா கட்டுப்பாடுகள் அமலில் உள்ளதால் கோவிலுக்குள் மட்டும் பக்தர்களை அனுமதிப்பது என்றும், நள தீர்த்ததில் நீராட அனுமதிப்பதில்லை என்றும் முடிவெடுத்து, புதுச்சேரி இந்து சமய அறநிலையத்துறை மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
சனிப்பெயர்ச்சி திருவிழாவின்போது பக்தர்களை அனுமதிக்கும் முடிவை கைவிடக்கோரி கோவிலின் ஸ்தானிகர்கள் சங்க தலைவரான எஸ்.பி.எஸ். நாதன் புதுச்சேரி அரசு, காரைக்கால் ஆட்சியர், கோவில் செயல் அலுவலர், துணைநிலை ஆளுனர் ஆகியோருக்கு நவம்பர் 27ஆம் தேதி மனு கொடுத்தார்.
இதன்பின்னர் அரசின் முடிவிற்கு தடை விதிக்கக்கோரி நாதன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நீதிபதி அனிதா சுமந்த் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
வைகுண்ட ஏகாதசி : தமிழகம் முழுவதும் மகாவிஷ்ணுவின் 108 திவ்ய தேசங்களிலும் சொர்க்கவாசல் திறப்பு
இந்த வழக்கில் காரைக்கால் மாவட்ட ஆட்சியரும், சனீஸ்வர பகவான் கோவில் தனி அதிகாரியுமான அர்ஜுன் சர்மா தாக்கல் செய்த பதில் மனுவில், சனிப்பெயர்ச்சி தினமான 27ஆம் தேதி குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே பக்தர்களை அனுமதிப்பது என முடிவு செய்துள்ளதாகவும், நளதீர்த்தம், பிரம்மதீர்த்தம் போன்ற தீர்த்தங்களில் நீராட பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், சனிப்பெயர்ச்சி தினத்தை தவிர்த்து மீதமுள்ள 48 நாட்கள் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், அன்னதானம் கோவிலுக்கு வெளியில் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும் தனி மனித இடைவெளியை பின்பற்றும் வகையில் பக்தர்களின் வசதிக்காக அமைக்கப்பட்டுள்ள வரிசை மூன்று கிலோமீட்டர் நீளத்திற்கு அமைக்கப்பட்டுள்ளதாகவும், நுழைவாயிலில் கிருமிநாசினி பயன்படுத்துவது மற்றும் முக கவசம் கட்டாயமாக்கப்பட்டு உள்ளதாகவும் பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பக்தர்களை கண்காணிக்க 140 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, அனைத்து ஏற்பாடுகளும் செய்து உள்ள நிலையில் கோவிலை மூட வேண்டும் என்ற மனுதாரரின் கோரிக்கையை ஏற்றால், மத உணர்வுடைய பக்தர்களின் வழிபடும் உரிமையில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், சனிப்பெயர்ச்சி விழாவை நடத்த அனுமதிக்க வேண்டுமென வலியிறுத்தப்பட்டுள்ளது. இந்த 48 நாட்களில் தரிசனத்துக்காக 60,000 மின்னணு அனுமதி சீட்டுகள் பக்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக புதுச்சேரி அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அனைத்து ஏற்பாடுகளும் செய்துள்ள போதிலும் தரிசனத்திற்கு ஒரு நாள் எத்தனை பேரை அனுமதிப்பார்கள் இந்த விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை என சுட்டிக்காட்டிய நீதிபதி அனிதா சுமந்து, முகக் கவசம் அணிவதை கட்டாயமாக்க வேண்டும் என்றும், கொரோனா தடுப்பு விதிகளை மீறுவோருக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் சனிப்பெயர்ச்சி திருவிழா நடத்துவது தொடர்பாக புதுச்சேரி இந்து சமய அறநிலையத் துறைச் செயலாளர், காரைக்கால் மாவட்ட ஆட்சியர், கோவில் செயல் அலுவலர் மற்றும் புதுச்சேரி, துணைநிலை ஆளுநர், மனுதார் மற்றும் தேவைப்படும் நபர்கள் அடங்கிய கூட்டத்தை இன்று நண்பகல் 12 மணிக்கு கூட்டி முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட்டார். இதனையடுத்து கொரோனா தடுப்பு நடைமுறைகளை அனைத்து தரப்பினரும் ஒப்புக்கொள்ளும் பட்சத்தில் திருவிழாவை நடத்திக் கொள்ளலாம் என அனுமதி அளித்து வழக்கை முடித்து வைத்தார்.
ஏசு கிறிஸ்து அவதரித்தார் : 2021ஆம் ஆண்டு மகிழ்ச்சிகரமான ஆண்டாக அமைய தேவாலயங்களில் பிரார்த்தனை
இதனையடுத்து காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அர்ஜூன் சர்மா, மாவட்ட துணை ஆட்சியர், கோவில் நிர்வாக அதிகாரியுமான ஆதர்ஷ், புதுச்சேரி இந்து சமய அறநிலையத்துறை செயலர் சுந்தரேசன், வக்கீல் நாதன் ஆகிய 5 பேர் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் காரைக்காலை அடுத்த தரங்கம்பாடியில் நடைபெற்றது.
கூட்டத்துக்குப் பின், ஆளுநர் கிரண்பேடி, திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலுக்கு சென்று, சனிப்பெயர்ச்சி விழா ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி இந்த ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டத்தில், கொரோனா விதிகளுக்கு உட்பட்டு சனிப்பெயர்ச்சி விழாவை பாதுகாப்பாக நடத்துவது, பக்தர்களை எவ்வாறு பாதுகாப்பாக தரிசனத்துக்கு அனுமதிப்பது, பக்தர்கள் மேற்கொள்ள வேண்டிய விதிமுறைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டன.
மேலும் சனிப்பெயர்ச்சி விழாவை, குறைந்த அளவிலான பக்தர்கள் பங்கேற்புடன் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார். தொடர்ந்து சனிபகவானை தரிசனம் செய்த கிரண்பேடி எள் தீபம் ஏற்றி தரிசனம் வழிபட்டார்.