ஆஹா..அடுத்தது இவரா...! ஆறுகளை புனரமைக்கும் பணியில் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர்
திருவள்ளூர்: வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கொசஸ்தலை ஆற்றை புனரமைக்கும் திட்டத்தை இன்று தொடங்கி வைத்துள்ளார்.
பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் வாழும் கலை அமைப்பானது இந்தியா மட்டுமன்றி சர்வதேச அளவில் தனது கிளைகளை கொண்டுள்ளது. அதன் நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் பிறந்தவர். யோகா உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை உலகம் முழுவதும் தனது அமைப்பின் மூலம் வழங்கி வரும் ரவிசங்கர், அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றத்தால் மத்தியஸ்தராக நியமிக்கப்பட்டார்.
தமிழகத்தில் ஏற்கனவே காவிரி கூக்குரல் என்ற பெயரில் காவிரி ஆற்றுப்படுகையில் மரம் நடும் திட்டத்தை முன்வைத்து ஜக்கி வாசுதேவ் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். இந்நிலையில் அந்த வரிசையில் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரும் இணைகிறார். இவர் கையில் எடுத்திருக்கும் ஆற்றின் பெயர் கொசஸ்தலை ஆறு. இது தமிழக ஆந்திர எல்லையில் தொடங்கி மொத்தம் 140 கி.மீ தூரம் பயணித்து எண்ணூரில் கடலில் கலக்கிறது.
சவுதியில் எண்ணெய் கிணறுகள் மீது நடந்த டிரோன் தாக்குதல்.. கிடுகிடுவென உயரப் போகும் பெட்ரோல் விலை!
கொசஸ்தலை ஆறு கழிவுகளால் மாசடைந்து வருவதாக புகார் எழுந்ததை அடுத்து, கடந்த சில மாதங்களுக்கு முன்பு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நேரடியாக சென்று அந்த ஆற்ரை பார்வையிட்டார். அனல் மின் நிலைய சாம்பல்களாலும், கழிவுகளாலும் ஆறு மாசடைந்துவிட்டதாக அப்போது பொதுமக்கள் புகார் கூறினர்.
இந்நிலையில், இன்று காலை கொசஸ்தலை ஆறு புனரமைக்கும் திட்டத்தை தொடங்கி வைத்த ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், பின்னர் திருத்தணி முருகன் கோவிலுக்கு சென்று வழிபட்டார். தமிழகத்தில் நீர்நிலைகளை பாதுகாக்க அரசாங்கம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை சாமியார்களும், எதிர்க்கட்சியினரும் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.