திமுக இந்துகளுக்கு எதிரி அல்ல... என்னுடைய துணைவியார் போகாத கோயிலே கிடையாது -ஸ்டாலின்
திருவள்ளூர்: திமுக இந்துகளுக்கு எதிரி அல்ல என்றும் சிலர் திட்டமிட்டு வீண் பழி சுமத்தி வருவதாகவும் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் கோணாம்பேடு கிராமத்தில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவில் பேசிய அவர், தன்னுடைய துணைவியார் போகாத கோயிலே கிடையாது எனவும் கூறினார்.
இது தொடர்பாக ஸ்டாலின் பேசிய விவரம் பின் வருமாறு;
சசிகலாவை அதிமுகவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் -ஆடிட்டர் குருமூர்த்தி பரபரப்பு பேச்சு
சிலர் திட்டமிட்டு
''நம்மை ஏதோ கோவிலுக்கு எதிரி போல் சித்தரிக்கிறார்கள். "கோயில்கள் கூடாது என்பதல்ல; கோயில்கள் கொடியவர்களின் கூடாரமாகி விடக்கூடாது" என்று தலைவர் கலைஞர் அவர்கள் பராசக்தியில் சிவாஜி அவர்களது முதலாவது வசனத்திலேயே சொன்னார்கள். அதைப் புரிந்துகொள்ளாமல் பா.ஜ.க. ஆர்.எஸ்.எஸ். இந்து முன்னணி போன்ற அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் சிலர் திட்டமிட்டு தி.மு.க. ஏதோ இந்துக்களுக்கு எதிரி போல சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.''
ஸ்டாலின் பரபரப்பு பேச்சு
''அது உண்மை அல்ல. இன்னும் வெளிப்படையாக சொல்ல வேண்டுமென்றால், என்னுடைய துணைவியார் போகாத கோயிலே கிடையாது. திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருக்கக்கூடிய பல மாவட்ட செயலாளர்கள் நெற்றியில் குங்குமம் வைத்திருப்பார்கள். அந்தப் பக்தியை நாங்கள் குறைச் சொல்ல தயாராக இல்லை. அது அவர்களுடைய விருப்பம். 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்பது பேரறிஞர் அண்ணா அவர்களது உறுதிமொழியாக இருந்தது.''
மக்களிடம் எடுபடாது
''அதைத்தான் இன்று நாமும் பின்பற்றி கொண்டிருக்கிறோம். என்னதான் திட்டமிட்டு சதி செய்து தி.மு.க. மீது பழி சுமத்திக் கொண்டு இருந்தாலும், அவையெல்லாம் எடுபடாது என்பதை எதிர்வரும் தேர்தலில் தமிழக மக்கள் நிரூபித்துக்காட்டத்தான் போகிறார்கள் என்பதை உறுதியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.''
ஸ்டாலின் விளக்கம்
''பதிமூன்று வயது மாணவனாக இருந்தபோது கோபாலபுரம் பகுதியில் முடி திருத்தும் கடையில் இளைஞர் தி.மு.க. என்ற படிப்பகத்தைத் தொடங்கி, படிப்படியாக வளர்ந்து, கட்சிப் பணி என்றால், இளைஞரணி செயலாளர், துணைப் பொதுச் செயலாளர், பொருளாளர், செயல் தலைவர், இன்றைக்கு உங்களில் ஒருவனாக இருந்து தலைவராக இருக்கக்கடிய பெரும் பொறுப்பை பெற்றிருக்கிறேன் என்றால், இதெல்லாம் வரலாறு! ஏதோ வாரிசு அரசியல் வாரிசு அரசியல் என்று சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். அதனால் தான் இதையெலலாம் சொன்னேன்; வேறல்ல!''
பெண்கள் முன்னேற்றம்
''தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்க கூடிய இந்த ஆட்சியால் வேலைவாய்ப்பு இல்லை; பெண்களின் முன்னேற்றம் பாழ் பட்டிருக்கிறது; விவசாயப் பெருங்குடி மக்கள் எந்தளவிற்கு இன்றைக்குத் துன்பத்திற்கும் தொல்லைகளுக்கும் ஆளாக்கப்பட்டு கொடுமைகளை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.''
பயிர் கடன் தள்ளுபடி
''இப்போது சொல்கிறேன். இன்னும் நான்கு மாதங்கள்தான். பொறுங்கள். நான்கு மாதங்களில் தி.மு.க. தான் ஆட்சிக்கு வரப்போகிறது. வந்தவுடன், விவசாயிகளினுடைய கூட்டுறவுக் கடன் அத்தனையும், எப்படி முதலமைச்சர் கலைஞர் அவர்கள் ரத்து செய்தாரோ அதேபோல் ரத்து செய்யப்படும். அதேபோல் நகை கடன். குடும்பத்தின் சூழல் காரணமாக - வறுமையின் காரணமாக தாய்மார்கள் தங்களது நகைகளை கூட்டுறவு வங்கிகளில் வைத்திருக்கிறார்கள், இன்னும் மீட்க முடியவில்லை; வட்டிக்கு வட்டி செலுத்த வேண்டிய நிலை இருக்கிறது. அதனால்தான் கடந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலின்போது சொன்னேன். அதன்படி 5 சவரன் வரையிலான நகை கடன்களை தள்ளுபடி செய்வோம். ''