370 சட்டப்பிரிவு நீக்க விவகாரம்.. வகுப்பறையில் துண்டுப்பிரசுரங்கள் ஒட்டிய காஷ்மீர் மாணவர்கள்
திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தில் காஷ்மீர் விவகாரம் குறித்து நோட்டீஸ் ஒட்டியதாக கூறி 5 மாணவர்ள் உள்பட 30 மாணவ, மாணவிகளுக்கு விளக்கம் கேட்டு பல்கலைக்கழகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
திருவாரூர் மாவட்டம் நீலக்குடி என்ற பகுதியில் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் உள்ளது. இதில் தமிழகம், கேரளம், ஜம்மு- காஷ்மீர், ஆந்திரம், கர்நாடகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
கடந்த திங்கள்கிழமை அன்று ஜம்மு காஷ்மீருக்கு அளித்து வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. இதற்கு மத்திய அரசுக்கு ஆதரவும், எதிர்ப்பும் எழுந்தது.
இந்த நிலையில் திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தை சேர்ந்த 5 மாணவிகள் உள்பட 30 மாணவ மாணவியர்கள் காஷ்மீர் விவகாரம் குறித்து பேசியுள்ளனர்.
பின்னர் காஷ்மீர் விவகாரம் குறித்து துண்டுபிரசுரங்கள் ஒட்டப்பட்டிருந்தன. அதில் மரணத்தை எப்படி சந்திப்பது என பல இரவுகள் நான் அதிர்ச்சி அடைந்திருக்கிறேன். பின்னர் நாம் காஷ்மீரை சேர்ந்தததால் துப்பாக்கி தோட்டா வழியாக மரணமே நம்மை தேடி வரும் என்பதை நினைவு கூர்ந்தேன் என எழுதப்பட்டிருந்தன.
இதுகுறித்து மாணவர்களிடம் பேராசிரியர்கள் விளக்கம் கேட்ட போது அவர்கள் தகாத வார்த்தைகளால் பேசியது தெரியவந்தது. பின்னர் அவர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.