சாலையில் கவிழ்ந்த லாரி.. உருண்டோடிய வெங்காய மூட்டைகள்.. திருவள்ளூர் அருகே பரபரப்பு
திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே லாரி விபத்துக்குள்ளானதால் அதில் ஏற்றப்பட்டிருந்த 10 டன் வெங்காய மூட்டைகள் சாலையில் உருண்டோடின.
வடமாநிலங்களில் பெய்த கன மழையின் காரணமாக வெங்காயம் விளைச்சல் பாதியாக குறைந்ததால், கடந்த சில மாதங்களாக வெங்காயத்தின் விலை நூறு ரூபாய்க்கு மேல் விற்பனையாகி வருகிறது. வெங்காயம் விலை உயர்வால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்த எகிப்து உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனையாகி வருகிறது.
இப்படி வெங்காயத்திற்கான தட்டுபாடு அதிகம் உள்ள நிலையில், ஆந்திர மாநிலத்தில் இருந்து ரூபாய் 10 லட்சம் மதிப்புள்ள 10 டன் வெங்காயம் சென்னை கோயம்பேடுக்கு கொண்டுவந்தபோது திருவள்ளூர் டோல்கேட் அருகே சென்டர் மீடியனில் கவிழ்ந்து விபத்துகுள்ளாகியுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் இருந்து நேற்று இரவு சரக்கு லாரியில் ரூபாய் 10 லட்சம் மதிப்புள்ள 10 டன் வெங்காயத்தை ஏற்றிக் கொண்டு சரக்கு லாரி ஒன்று சென்னை கோயம்பேடு நோக்கி வந்துகொண்டிருந்தது.அந்த லாரி திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சி டோல்கேட் அருகே அதிகாலை வந்து கொண்டிருந்தபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையின் நடுவில் இருந்த சென்டர் மீடியனில் மோதி கவிழ்ந்தது.
இதில் அந்த சரக்கு லாரியில் இருந்த வெங்காய மூட்டைகள் சாலையில் சிதறிக் கிடந்தது. மேலும் அந்த சரக்கு லாரியில் முன்பகுதி நொறுங்கி 2 டயர்கள் தனியாக சென்று விட்டது. இந்த விபத்தில் அந்த சரக்கு லாரி ஓட்டி வந்த ஆந்திர மாநிலத்தை சேர்ந்த டிரைவரான ஜில்லான் மற்றும் உரிமையாளர் மாபாஷா ஆகியோர் காயமின்றி தப்பினர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருவள்ளூர் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்த வழியாக போக்குவரத்தை சீர் செய்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.