ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து.. தைலக்காட்டில்.. ஜாலிதான் ஜாலிதான்.. ஆ... "டிரோன்".. தெறி ஓட்டம்!
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் போலீசார் ட்ரோன் கேமரா மூலம் கண்காணிப்பில் ஈடுபட்டபோது, ட்ரோன் கேமராவை கண்டதும் தைல காட்டில் உல்லாசமாக இருந்த கள்ளக்காதல் ஜோடிகள் தலை தெறிக்க ஓடி இருசக்கர வாகனத்தில் மின்னல் வேகத்தில் தப்பி சென்ற காட்சிகள் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதன் ஒருபகுதியாக மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, அமலில் உள்ளது.
மேலும் கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள், வணிக வளாகங்கள், திரையரங்குகள், டாஸ்மாக் கடைகள் போன்றவை மூடப்பட்டுள்ளன. பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் வெளியே வருவதற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் இதுவரை 50 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்காமல் இருப்பதற்காக மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் ஊரடங்கை கடுமையாக்கியுள்ளது. எனினும் ஒருசிலர் ஆபத்தை உணராமல் அத்தியாவசிய தேவைகள் இன்றி, வெளியே சுற்றி திரிகின்றனர்.
குறிப்பாக போலீஸ் ரோந்து வாகனங்கள் செல்ல முடியாது பகுதிகளில், கிரிக்கெட், வாலிபால் உள்ளிட்ட விளையாட்டுகளை விளையாடுவதை வாலிபர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். மேலும் புதர் நிறைந்த பகுதிகளில் பணம் வைத்து சீட்டு விளையாடுதும், போதை வஸ்துகளை பயன்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு சமூக விரோத செயல்களும் நடைபெறுகிறது.
இதுபோன்ற குற்றங்கள் மற்றும் பொதுமக்கள் நடமாட்டத்தை கண்காணிக்க கும்மிடிப்பூண்டி பகுதியில் ட்ரோன் கேமரா மூலம் கண்காணிக்க போலீசார் முடிவு செய்தனர். அதன்படி கும்மிடிப்பூண்டி ஏரிக்கரையில் போலீசார் ட்ரோன் கேமராவை பறக்கவிட்டபோது, அங்கு கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்த இளைஞர்கள் அனைவரும் ட்ரோன் கேமராவை கண்டதும் தண்ணீரில் நீந்தியும், மரத்தில் ஏறியும், லுங்கியை கொண்டு முகத்தை மூடியும், மேலும் ட்ரோன் கேமராவை அடித்து துரத்தியும் ஓடினர்.
அதை விட காமெடி எதுன்னா.. அங்குள்ள தைலக் காட்டில் தனிமையில் உல்லாசமாக இருந்த கள்ளக்காதல் ஜோடிகள் மெய்மறந்த நிலையில் இருந்தனர். காதலன் மடியில் காதலி படுத்திருந்தார். நெருக்கமாக பேசிக் கொண்டிருந்தபோது திடீரென தலைக்கு மேலே ட்ரோன் கேமரா வந்து நின்றதும்.. அதிர்ச்சி அடைந்த அவர்கள் துண்டைக் காணோம்.. துப்பட்டாவைக் காணோம் என தலை தெறிக்க ஓடி இருசக்கர வாகனத்தில், மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர். அவர்கள் போகும் வரை டிரோனும் விடாமல் விரட்டிச் சென்ற அந்த காட்சிகளையும் போலீசார் வெளியிட்டுள்ளனர்.
சோடிகளை இப்படி ஜாலியா லவ் பண்ணக் கூட விடாம படுத்தி எடுக்கிறியேடா கொரோனா.. அப்படின்னு அந்தக் காதலர்கள் மனசுக்குள் நிச்சயம் புலம்பியிருப்பார்கள்!