அமானுஷ்ய ஓவியம், மஞ்சள், குங்கும பொட்டுடன் வீடுகள் முன் வீசப்படும் முட்டை.. திருத்தணியில் ஷாக்!
திருத்தணி: திருத்தணி அருகே மர்மநபர் ஒருவர் மாந்திரீகம் செய்த முட்டையை ஊருக்குள் வீசியதால் இளம்பெண் மரணம் அடைந்துவிட்டதாக ஊர் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
திருத்தணி அருகே சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலை பொன்பாடி சோதனைச் சாவடி அருகில் ராஜீவ்காந்தி நகர் அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள்.
இவர்கள் ஊரில் சில நாட்களாக சில மர்ம நபர்கள் வீடுகளுக்கு முன்பு முட்டை மந்திரம் செய்து சில படங்களை முட்டையில் வரைந்து மஞ்சள், குங்குமம் வைத்து வீசிவிட்டு சென்று விடுகின்றனராம்.
அதிர்ச்சி
இதனால் ஒரு இளம்பெண் இறந்து விட்டதாகவும் ஊர்மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதுகுறித்து சம்பவ இடத்தில் ஊர் மக்களிடம் விசாரித்த போது ஊர் மக்கள் கூறிய தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது. ராஜீவ் காந்தி நகர் பகுதியில் வசிப்பவர் தட்சிணாமூர்த்தி (50). இவரது மனைவி பொன்னியம்மாள் (45).
வீட்டு முன் முட்டை
இவர்களது பிள்ளைகள் சுஜாதா (29), பொற்கொடி (24) வினோத் குமார் (20) தட்சிணாமூர்த்தியின் தாயார் லட்சுமி அம்மாள் வயது (85). இந்த நிலையில் மர்ம நபர் ஒவ்வொரு அமாவாசை அன்று நள்ளிரவிலும் மாந்திரீகம் செய்து முட்டையில் படங்கள் வரைந்து குங்குமம்- மஞ்சள் வைத்து முட்டையை தட்சிணாமூர்த்தியின் வீட்டு முன்பு வீசி சென்று இருக்கிறார்.
உடல்நிலை சரியில்லை
அந்த மர்ம நபர் யார் என்று தெரியவில்லை. ஆனால் தட்சிணாமூர்த்தியின் குடும்பத்தில் அனைவருக்கும் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் பல லட்சம் செலவு செய்ததாக தட்சிணாமூர்த்தி தெரிவித்துள்ளார். தட்சிணாமூர்த்தியின் மூத்தமகள் சுஜாதா நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருந்த நிலையில் மாந்திரீக முட்டை வீட்டு முன்பு வீசப்பட்ட பின்பு அதை பார்த்த சுஜாதா இறந்துவிட்டதாக, ஊர் மக்கள் தெரிவிக்கின்றனர்.
முட்டை வீச்சு
அதே ஊரில் உள்ள ஜே.சி.பி டிரைவர் துரைசாமி (34), அவரது மனைவி ரேணுகா (28) ஆகியோருக்கும் அவர்களது வீட்டு முன்பு மாந்திரீகம் செய்யப்பட்ட முட்டை வைக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் துரைசாமி மற்றும் ரேணுகா உடல்நிலை சரியில்லாமல் கடுமையான இன்னல்களுக்கு ஆளானதாக தெரிவித்துள்ளனர். மேலும் தட்சிணாமூர்த்தியின் எதிர் வீட்டில் உள்ள மல்லிகா ,அவரது கணவன் லோகன் ஆகியோர் வீட்டு முன்பும் மாந்திரீகம் செய்யப்பட்ட முட்டை வீசப்பட்டதாக ஊர் மக்கள் தெரிவித்தனர்.
புகாரளித்தும் நடவடிக்கை இல்லை
இந்த நிலையில் திடீரென மல்லிகாவின் பிள்ளைகள் தாய் தந்தையை பிரிந்து சென்று விட்டதாகவும் அனைத்திற்கும் இந்த மாந்திரீக முட்டைதான் காரணம் என்றும் வீட்டில் உள்ளவர்கள் நோய்வாய்ப்பட்டு உள்ளார்கள் என்றும் ஊர் மக்கள் கூறுகின்றனர். இதுகுறித்து காவலர்களிடமும் காவல்துறை அதிகாரிகளிடமும் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்கிறார்கள்.