இரு வாக்குச் சாவடிகளுக்கு பூட்டு போட்டு மக்கள் போராட்டம்.. போலீஸ் தடியடி.. திருவள்ளூரில் பரபரப்பு
திருவள்ளூர்: திருவள்ளூரில் நடந்த ஊராட்சித் தேர்தலில் கள்ள ஓட்டு போட முயன்றவர்களை கைது செய்யக் கோரி இரு வாக்குச் சாவடிகளுக்கு பொதுமக்கள் பூட்டு போட்டு போராட்டம் நடத்தினர். இதையடுத்து போலீஸார் லேசான தடியடி நடத்தி கலைத்தனர்.
தமிழகம் முழுவதும் ஊராட்சி மற்றும் பஞ்சாயத்துகளுக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் வெங்கத்தூர் ஊராட்சிக்குட்பட்ட ஒண்டிகுப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் வாக்காளர்கள் வரிசையில் காத்திருந்தனர்.
அப்போது அங்கு வந்த ஒருவர் கள்ள ஓட்டு போட முயன்றார். இதை பார்த்துவிட்டு அங்கிருந்த 3ஆவது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளரான சுரேஷ், மற்ற வேட்பாளர்கள் அந்த நபரை பிடித்து தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைத்தனர்.
என்னாது நல்லாட்சி வழங்குவதில் தமிழகத்திற்கு முதலிடமா?.. இதுதான் இந்த ஆண்டின் சிறந்த காமெடி.. தினகரன்
வாக்குச் சாவடி
சிறிது நேரத்தில் அங்கு வந்த கும்பல் தேர்தல் அதிகாரி மற்றும் ,போலீஸாரை தள்ளிவிட்டு கள்ள ஓட்டு போட வந்த நபரை வெளியே அழைத்து சென்றுவிட்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த வேட்பாளர்கள் கள்ள ஓட்டு போட முயன்றவர்களை பிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி 2 வாக்குச் சாவடிகளுக்கு பூட்டு போட்டு போராட்டம் நடத்தினர்.
சமாதானம்
எனினும் அந்த நபரை கைது செய்யாததால் வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட சுரேஷ் அருகே இருந்த 25 அடி உயர கட்டடத்தின் மீது ஏறி தற்கொலை செய்ய போவதாக மிரட்டல் விடுத்தார். பின்னர் அங்கிருந்தவர்கள் அவரை சமாதானப்படுத்தி அழைத்து சென்றனர்.
திடீர் மறியல்
மேலும் அந்த நபரை கைது செய்யும் வரை வாக்கெடுப்பே நடத்தக் கூடாது என கூறி போராட்டம் நடத்தினர். வாக்குச்சாவடி மையத்திற்கு எதிரே திருவள்ளூர்- சென்னை நெடுஞ்சாலையில் திடீரென மறியல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
வாக்குச் சாவடிகள்
இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்கள் கலையாததால் போலீஸார் தடியடி நடத்தி கலைத்தனர். இதனால் வாக்குப்பதிவு சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. பின்னர் திமுக எம்எல்ஏ விஜி ராஜேந்திரன் பகுதி மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து வாக்குச் சாவடிகள் திறக்கப்பட்டு மீண்டும் வாக்குப் பதிவு நடைபெற்றது.