தலைப்பாகை கட்டி.. வேட்டியை மடிச்சுக் கட்டி... மண்வெட்டியைத் தூக்கி.. அசத்திய முதல்வர் பழனிச்சாமி!
திருவள்ளூர்: பாருங்க நம்ம முதல்வர் பழனிச்சாமியை.. வேட்டியை மடித்துக்கட்டி, தலைக்கு உருமாக்கட்டி, மண்வெட்டியை தூக்கி குளத்தை தூர் வரும் பணியினை துவக்கி வைத்துள்ளார்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று குடிமராமத்து பணிகள் 2019-20ன் கீழ், தமிழ்நாடு நீர்வள ஆதார பாதுகாப்பு மற்றும் நீர் மேலாண்மை இயக்கப் பணிகள் தொடக்க விழாவில், திருவள்ளூர், 43 பனப்பாக்கம் ஏரியில் குடிமராமத்து பணிகளை துவக்கி வைத்தார்.
அப்போது பூமி பூஜை நடத்தப்பட்டது. தொடர்ந்து முதல்வர் பழனிச்சாமி கடப்பாரையால் குத்தினார். பின்னர் வேஷ்டியை மடித்துக்கட்டிய முதல்வர் துண்டை தலையில் தலைப்பாகை போல் கட்டி முழு விவசாயி போல மாறி மண்வெட்டி எடுத்தார். அப்படியே கடப்பாரை குத்திய இடத்தில் மண்ணை அள்ளி தட்டில் போட்டார். இதை பார்த்து சுற்றி இருந்த அமைச்சர்கள் வேலுமணி, மாஃபா பாண்டியராஜன் உள்பட அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். அதன்பின்னர் அந்த மண் நிறைந்த தட்டை எடுத்து விவசாய பணிக்கு வந்த பெண் ஒருவரிடம் அளித்தார்.
மாண்புமிகு முதல்வர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் இன்று, குடிமராமத்து பணிகள் 2019-20ன் கீழ், தமிழ்நாடு நீர்வள ஆதார பாதுகாப்பு மற்றும் நீர் மேலாண்மை இயக்கப் பணிகள் தொடக்க விழாவில், திருவள்ளூர், 43 பனப்பாக்கம் ஏரியில் குடிமராமத்து பணிகளை துவக்கி வைத்தார். #TNGovt #SaveWater pic.twitter.com/crm0OMIM32
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) August 7, 2019
பின்னர் விவசாய குழுக்களுக்கான குறை தீர்ப்பு செயலி மற்றும் குடிமராமத்து பணிகள் -விவசாய பெருமக்களுக்கான வழிகாட்டுதல் கையேடு ஆகியவற்றை முதல்வர் பழனிச்சாமி வெளியிட்டார். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பழனிச்சாமி, விவசாயிகள் பங்களிப்புடன் குடிமராமத்து திட்டட்ம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது: முதல்வர் பழனிச்சாமி, பொருளாதார வளர்ச்சிக்கு நீர் மேலாண்மை அவசியம் என்றும் பருவமழை காலத்திற்கு முன் நீர்நிலைகளை மேம்படுத்தி அதிகளவு நீர் சேமிக்க வழிவகை செய்யப்படும் என்றும் உறுதி அளித்தார். வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ளதால் குடிமராமத்து பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டுள்ளதாகவும் முதல்வர் தெரிவித்தார்.
மேகதாதுவில் அணைகட்ட கர்நாடகாவுக்கு மத்திய அரசு அனுமதி மறுத்துள்ள நிலையில், முதல்வர் பழனிச்சாமி காவிரியின் குறுக்கே யாரும் எந்த அணையும் கட்டக்கூடாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது என்றார். பருவமழை பெய்தால்தான் தண்ணீர் பற்றாக்குறையை போக்க முடியும் என்றும் அப்போது கூறினார். விண்ணில் இருந்து விழும் ஒவ்வொரு மழை நீரையும் நாம் சேமிக்க வேண்டும் என்றும் முதல்வர் வலியுறுத்தினார்.