என்னாச்சு மாஃபா பாண்டியராஜனுக்கு... மு.க.ஸ்டாலின் மீது அதிரடியாக பாய்வது ஏன்
திமுக தலைவர் ஸ்டாலினை அமைச்சர் பாண்டியராஜன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
திருவள்ளூர்: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் திடீரென மு.க.ஸ்டாலின் மீது கடுமையான குற்றச்சாட்டுக்களை வைத்து வருவது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
வறுமை காரணமாக தீப்பெட்டி தொழிற்சாலையில் வேலை பார்த்து கொண்டே ஸ்கூல் படிப்பை முடித்தவர்தான் மாஃபா பாண்டி/ராஜன். கடினமான உழைப்பு, பெரும் புத்திசாலி. எம்பிஏ முடித்த அறிவாளி. கடந்த 1992-ல் மாஃபா (Mofoi) எனும் வேலைவாய்ப்பு நிறுவனத்தை தொடங்கினார். இதன் மூலமாக எத்தனையோ ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்க காரணமாக இருந்தார். இதனால்தான் பாண்டியராஜன் மாஃபா பாண்டியராஜனாக ஆனார்.
புதிய டெக்னாலஜி
திடீரென்று அரசியலில் நுழைய ஆசைப்பட, அதற்காக பாஜகவில் சேர்ந்து கொண்டார். பின்னர் அதை விட்டுவிட்டு தேமுதிகவில் இணைந்தார். அதையும் விட்டுவிட்டு அதிமுகவில் வந்து சேந்தார். ஆவடி தொகுதி மக்களின் குறைகளை கேட்டறிய புதிய டெக்னாலஜியை கொண்டு வந்தார். "மை ஆவடி ஆப்" என்று இதற்கு பெயர். இதன் மூலம் ஆவடி முழுக்க மாஃபா பாண்டியராஜன் பிரபலம் ஆனார்.
ஆங்கில புலமை
இது எல்லாவற்றையும் விட சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கேள்விகளுக்கு தெளிவாகவும், சரியான உச்சரிப்புடனுடம் உடனுக்குடன் பாண்டியராஜன் பதிலளித்தது அனைவரையும் கவர்ந்த ஒன்று. குறிப்பாக திமுக உறுப்பினர் தியாகராஜனின் ஆங்கில உரைக்கு, பாண்டியராஜனும் ஆங்கிலத்திலேயே சரளமாக பேசியது அப்போதை முதல்வர் ஜெயலலிதாவையும் ஒருமுறை திரும்பி பார்க்க வைத்தது.
திமுக தலைவர்கள்
இவ்வளவு படித்த பாண்டியராஜன்தான், பாலியல் குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சியினர் மீது சுமத்த துவங்கியுள்ளார். கடந்த 2 தினங்களுக்கு முன்பு செங்குன்றம் அருகே பாடியநல்லுர் பொதுக்கூட்டத்தில் பேசிய, "திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்ட முன்னணி திமுக தலைவர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகள்" உள்ளன என்றார்.
ஸ்டாலின், துரைமுருகன்
கூடியிருந்த மக்கள் முன்னிலையிலேயே இந்த குற்றச்சாட்டை பாண்டியராஜன் சுமத்தியுள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஏனெனில் பாலியல் குற்றச்சாட்டை ஸ்டாலின், துரைமுருகன் மீது நேரிடையாகவும், இவ்வளவு பகிரங்கமாகவும் யாருமே சொன்னதில்லை. அத்துடன் தன் கட்சி தரப்பிலேயே அமைச்சர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை வைத்து கொண்டு பாண்டியராஜன் இப்படி பேசியது பொதுமக்கள் தரப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஜெயிலுக்கு போவார்கள்
இந்நிலையில், திருவள்ளூரில் அ.தி.மு.க. தொழிற்சங்க நிர்வாகியின் மகன் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டுவிட்டு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பாண்டியராஜன், அப்போதும் ஸ்டாலினை பகிரங்கமாகவே வறுத்தெடுத்தார். "திமுக ஆட்சிக்கு வந்தால் ஊழல் அமைச்சர்கள் ஜெயிலுக்கு போவார்கள் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறுகிறார்.
ஸ்டாலின் ஆணவ பேச்சு
இப்படிப்பட்ட ஆணவ பேச்சால் தான் ஆர்.கே.நகர் தொகுதியில் ஸ்டாலின் டெபாசிட்டை இழந்தார். பிரியாணி கடை யை அடித்து உடைப்பதும், பியூட்டி பார்லரில் பெண்களை தாக்குவதும், பேன்சி ஸ்டோரை அடித்து உடைக்கும் திமுகவினரை கட்டுக்கோப்போடு முதலில் ஸ்டாலின் நடத்தட்டும், உங்கள் அராஜகத்தை மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். தேர்தலில் யார் ஜெயிப்பது, யாரை எங்கே அனுப்புவது என்று பார்த்துக் கொள்ளலாம்" என்று தெரிவித்தார்.
விவாதங்கள்
பல கட்சி தாவியவர், எப்படி மு.க.ஸ்டாலின் குறித்து இப்படிப் பேசலாம். இதுவரை யாரும் துணிந்து சொல்லாத குற்றச்சாட்டு இது. அதை ஜஸ்ட் லைக் தட் பாண்டியராஜன் சொல்வது ஏன்று விவாதங்கள் கிளம்பியுள்ளன.