அதிமுகவுக்கு மாற்று தேமுதிகதான்.. தனித்து நிற்கவும் தயார்.. "41"க்கு ஆப்பு வைக்கும் விஜய பிரபாகரன்
திருவள்ளூர்: திமுக, அதிமுகவுக்கு ஒரே மாற்று தேமுதிகதான் என விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் திருமண விழா ஒன்றில் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் கலந்து கொண்டார். அப்போது அவர் அங்கு பேசுகையில், சட்டசபை தேர்தல் பிரச்சாரத்திற்கு விஜயகாந்த் வருவார்.
தேர்தல் தேதி அறிவித்த பின்னரே கூட்டணி குறித்து கூற முடியும். இதனால் இப்போதைக்கு அவரவர் பணியை செய்து வருகிறோம்.
ஒரே கட்சி தேமுதிக
திமுக, அதிமுகவுக்கு மாற்றான ஒரே கட்சி தேமுதிகதான். கட்சி ஆரம்பிக்கப்பட்ட நோக்கத்தை நிறைவேற்றாமல் ஓய மாட்டோம். சட்டசபையில் தேமுதிகவின் குரல் ஒலிக்கும். அத்திவரதர் போல் விஜயகாந்தும் எழுந்து வந்து புரட்சி நடத்துவார். அதிமுகவில் நிறைய குழப்பங்கள் இருக்கின்றன.
தனித்து போட்டி
சசிகலா பூரண குணமடைந்து தமிழகம் திரும்ப வேண்டும். கூட்டணியோடு போட்டியிடவும் நாங்கள் தயாராக இருக்கிறோம். விஜயகாந்தை போல் ஊழலை ஒழிப்பேன் என எந்த தலைவராலும் கூற முடியாது. 2006 ஆம் ஆண்டே தேர்தலில் தனித்து போட்டியிட்டதால் தற்போது தனித்து நிற்கவும் பயமில்லை என்றார்.
விஜய பிரபாகரன்
அதிமுக கூட்டணியில் இருந்து கொண்டே விஜய பிரபாகரன் அக்கட்சிக்கு மாற்று தேமுதிக என கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அண்மைக்காலமாக அதாவது நாடாளுமன்ற தேர்தலுக்கு கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை நடந்த போதிலிருந்தே விஜய பிரபாகரன் பெரியவர்கள் மதிக்காமல் கண்டபடி பேசிவந்தார்.
விஜயகாந்த்
அவரை பிரேமலதாவும் விஜயகாந்தும் கண்டிக்கவே இல்லை. ஒரு கூட்டணியில் இருந்து கொண்டே அந்த கூட்டணி குறித்து அவதூறாக பேசுவது எந்த விதத்தில் நியாயம் என அதிமுக தொண்டர்கள் பொங்குகிறார்கள். மக்கள் ஆதரவு கிடைக்காததால்தான் தாங்கள் கூட்டணி அமைக்கிறோம், இல்லாவிட்டால் தனித்தே போட்டியிடுவோம் என்றும் விஜய பிரபாகரன் குறிப்பிட்டுள்ளார். மக்கள் ஆதரவு இல்லாத ஒரு கட்சி எப்படி 41 இடங்களை எதிர்பார்க்கிறது என அதிமுகவினர் கேள்வி எழுப்புகிறார்கள்.