திருத்தணியில் உச்சத்தை எட்டிய தண்ணீர் பஞ்சம்: கேன்களில் தண்ணீர் வாங்கி டயாலிஸிஸ் செய்யும் அவலம்!
திருவள்ளூர்: திருத்தணி அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு டயாலிஸிஸ் செய்யக்கூட தண்ணீர் கிடைக்காததால் மக்கள் பெரும் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
தமிழகம் முழுவதும் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. வழக்கமாக தண்ணீர் பஞ்சம் என்றால் சென்னைதான் என்று கூறி மற்ற மாவட்ட மக்கள் கிண்டலடிப்பார்கள்.
ஆனால் இந்த ஆண்டு சென்னை உட்பட தமிழகம் முழுவதும் தண்ணீர் பஞ்சம் தொற்றியுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர் என பல மாவட்டங்களிலும் தண்ணீருக்கு கடுமையான பஞ்சம் ஏற்பட்டுள்ளது.
புக்ஸோட வாட்டர் பாட்டிலையும் மறக்காம கொண்டு வாங்க.. சென்னை நிலைமை மோசமடைகிறது!
எஸ்எம்எஸ் அனுப்பிய பள்ளிகள்
சென்னையில் உள்ள தனியார் பள்ளிகள், மாணவர்களை பள்ளிக்கு அனுப்பும்போது கையில் தண்ணீர் பாட்டிலையும் கொடுத்து அனுப்ப வேண்டும் என பெற்றோருக்கு குறுந்தகவல் அனுப்பினர். பெரும்பாலான சென்னை மக்கள் வீட்டிற்கு தேவையான தண்ணீரை டேங்கர் லாரிகள் மூலமே பெற்று பயன்படுத்தி வருகின்றனர்.
டயாலிஸிஸ்க்கு தண்ணீர் இல்லை
இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் உள்ள அரசு மருத்துவமனையில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. திருத்தணி அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு டயாலிஸிஸ் செய்ய தண்ணீர் இல்லாததால் கேன்களில் தண்ணீர் வாங்கி பயன்படுத்தப்படுகிறது.
தண்ணீர் கேன்கள்
டயாலிஸிஸ் பிரிவுக்கு நாள்தோறும் 6000 லிட்டர் தண்ணீர் தேவைப்படும். ஆனால் திருத்தணி சுற்றுவட்டாரப்பகுதியில் நிலவும் கடுமையான வறட்சியால் டாயலிஸிஸ் சிகிச்சைக்கு 20 லிட்டர் தண்ணீர் கேன்கள் மற்றும் மருத்துவமனையின் கழிவறை தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது.
நோயாளிகள் கோரிக்கை
இதனால் அதிர்ச்சியடைந்துள்ள நோயாளிகளும் அவர்களின் உறவினர்களும் மருத்துவமனையில் நிலவும் தண்ணீர் பிரச்சனையை தீர்க்க மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.