திருமணம் நிச்சயித்த பெண்ணை மணக்க மறுக்கும் ஆசிரியர் பகவான்.. நாள் முழுவதும் தொடரும் விசாரணை!
Recommended Video
திருவள்ளூர்: நிச்சயித்த பெண்ணை திருமணம் செய்ய மறுத்ததாக ஆசிரியர் பகவான் மீது கவிதா என்ற பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதுதொடர்பாக ஆசிரியர் பகவானிடம் காலை முதல் விசாரணை நடத்தப்பட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பொம்மராஜப்பேட்டையைச் சேர்ந்தவர் பகவான். இவர் பள்ளிப்பட்டு அரசு பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
முன்னதாக திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே உள்ள வெள்ளியகரம் அரசு உயர் நிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வந்தார் பகவான். கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஆசிரியர் பகவான் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
கதறிய மாணவர்கள்
இதற்காக விடுப்புச் சான்று பெற பள்ளிக்கு வந்த ஆசிரியர் பகவானை மாணவர்கள் சுற்றிக்கொண்டு கதறி அழுதனர். இதனால் நெகிழ்ந்து போன ஆசிரியர் பகவானும் கண்ணீர் விட்டு அழுதார். இதனால் ஆசிரியரின் பணியிட மாற்ற உத்தரவு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது.
நாடு முழுவதும் பிரபலம்
மாணவர்கள் - ஆசிரியரின் பாசப்போராட்ட வீடியோ வைரலானது. பல்வேறு ஊடகங்களும் மாணவர்கள், ஆசிரியர் உறவு குறித்து செய்திகள் வெளியிட்டன. இதைத்தொடர்ந்து ஆசிரியர் பகவானுக்கு பிரபலங்கள் பலரும் ஆதரவு தெரிவித்து வாழ்த்து கூறினர். இதனால் ஒரே நாளில் நாடுமுழுவதும் பிரபலமானார் ஆசிரியர் பகவான்.
சர்ச்சையில் ஆசிரியர்
இந்நிலையில் தற்போது ஒரு சர்ச்சையில் சிக்கி காவல்நிலையம் வரை சென்றுள்ளார் ஆசிரியர் பகவான். வெள்ளியகரத்தை சேர்ந்த நாதமுனி என்பவரின் மகளைத் திருமணம் செய்துகொள்வதாக ஆசிரியர் பகவான் வாக்குறுதி அளித்ததாகவும், ஆனால் திருமணம் செய்துகொள்ளாமல் ஏமாற்றிவிட்டதாகவும் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியரிடம் விசாரணை
இந்த புகாரின் பேரில் ஆசிரியர் பகவானை காவல்நிலையத்துக்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மாணவர்களின் மனதிலும் மக்களின் மனதிலும் நன்மதிப்பை பெற்ற ஆசிரியர் பகவான் மீது பெண் ஒருவர் புகார் அளித்திருக்கும் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காலை முதல் விசாரணை
காலையில் காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்ட ஆசிரியர் பகவானிடம் இதுவரை தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. ஆசிரியரிடம் காலை முதல் மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தொடரும் விசாரணையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருமணத்திற்கு மறுப்பு
வரும் 19ஆம் தேதி ஆசிரியர் பகவானுக்கு கவிதா என்ற பெண்ணுடன் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அந்த பெண்ணை ஆசிரியர் பகவான் திருமணம் செய்ய மறுத்ததால் கவிதா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.