தடுமாறி விழுந்த அதே இடத்தில் மரணம்.. ஜெயலட்சுமி உடலை கட்டிப்பிடித்து அழுத உறவுகள்.. எமனாக வந்த லாரி
லாரி மோதியதில் இளம்பெண் உயிரிழந்தார்
பொன்னேரி: தடுமாறி விழுந்த அதே இடத்தில் துடிதுடித்து இறந்தார் ஜெயலட்சுமி.. சொந்தக்காரர் வீட்டுக்கு சென்று விட்டு டூவீலரில் வந்து கொண்டிருந்த ஜெயலட்சுமியை, பின்னாடியே வந்த லாரி ஒன்று மோதியபோது இந்த பரிதாபம் நடந்துள்ளது.
பொன்னேரியை அடுத்த மீஞ்சூர் ராமரெட்டிபாளையத்தை சேர்ந்தவர் யுவராஜ்.. 28 வயதாகிறது.. மணலியில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.
இவருடைய மனைவி ஜெயலட்சுமி.. 24 வயதாகிறது.. இவர்களுக்கு 6 மாத பெண் குழந்தை உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பாக யுவராஜ், சபரிமலை சென்றுவிட்டு 2 நாட்களுக்கு முன்புதான் வீடு திரும்பினார்.
பிரசாதம்
பின்னர் இருவரும் செங்குன்றத்தை அடுத்த பாடியநல்லூரில் உள்ள சொந்தக்காரர் வீட்டுக்கு பிரசாதம் தருவதற்காக சென்றிருந்தனர்.. பிறகு அங்கிருந்து பைக்கில் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.
முன்பக்க சக்கரம்
செங்குன்றம்-திருவள்ளூர் கூட்டு ரோடு அருகே வந்தபோது, இவர்களுக்கு பின்னால் படு வேகமாக வந்த லாரி ஒன்று, எதிர்பாராதவிதமாக பைக்கில் மோதிவிட்டது.. நிலைதடுமாறி தம்பதி 2 பேருமே கீழே விழுந்துவிட்டனர்.. இதில் லாரியின் முன்பக்கத்தில் போய் ஜெயலட்சுமி விழுந்து விட்டார்.
படுகாயம்
அப்போது லாரியின் சக்கம் ஜெயலட்சுமி மீது ஏறியதால், அங்கேயே துடிதுடித்து இறந்தார்.. கணவர் கண்முன்னாடியே ஜெயலட்சுமியின் உயிர் பிரிந்தது. லேசான காயங்களுடன் விழுந்து கிடந்த யுவராஜ் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
கதறினர்
தகவலறிந்து மாதவரம் போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து சடலத்தை மீட்டனர்.. ஆனால் அதற்குள் அந்த லாரி டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.. அவரை வலை வீசி தேடிவருகிறார்கள். ஜெயலட்சுமியின் சடலத்தை கட்டிப்பிடித்து கொண்டு உறவினர்கள் அழுதது மனசை கலங்கடிக்க வைத்தது!