டிக் டாக்கில் புகுந்த சாதி பேய்.. ஒரு உயிர் பறிபோன அநியாயம்.. திருத்தணி அருகே கொடுமை!
டிக் டாக் வீடியோ விபரீதத்தில் இளைஞர் தற்கொலை செய்து கொண்டார்
திருத்தணி: டிக்டாக்கிலும் சாதியை கொண்டு வந்துவிட்ட கொடூரம் அரங்கேறி உள்ளது. இந்த விபரீதத்தினால் ஒரு உயிரே பறிபோய் விட்ட கொடுமையும் திருத்தணி அருகே நடந்துள்ளது.
திருத்தணி அருகே உள்ள கிராமம் கார்த்திகேயபுரம். இங்குள்ள ஏரிக்கரை ஓடையில், இளைஞர் ஒருவர் இறந்து கிடந்தார். அவருக்கு எப்படியும் 30 வயதிருக்கும்.
இதை பார்த்த பொதுமக்கள், உடனடியாக திருத்தணி போலீசாருக்கு தகவல் தந்தனர். விரைந்து வந்த போலீசாரும், பிரேதத்தை கைப்பற்றியவுடன், அங்கிருந்த விஷ பாட்டிலையும் கைப்பற்றி விசாரணையை தொடங்கினர்.
பின்னணி
அப்போதுதான், வெங்கடராமன் தற்கொலை பின்னணி தெரியவந்தது. போன பிப்ரவரி 21-ம் தேதி நண்பர் விஜியுடன் சேர்ந்து டிக்டாக்' ஆப்பில் வீடியோ எடுத்துள்ளார். இதில், தன்னுடைய தாழவேடு காலனி மக்களை சாதியை வைத்து அவதூறாக பேசியுள்ளதாக தெரிகிறது.
வீடியோ
இந்த வீடியோவை விஜி சோஷியர் மீடியாவில் போட்டு விடவும், காலனி மக்கள், வெங்கடராமன் மீது கடுமையான ஆத்திரம் அடைந்து மறியலும் செய்துள்ளார்கள். இதனால் 2 பேருமே தலைமறைவாகி விட்டனர். இவர்களை போலீசாரும் தேடி வந்தனர். இது சம்பந்தமான வழக்கும் பதியப்பட்டது.
கோபம்
ஆனால் தன் மீது ஊர் மக்கள் கோபம் அடைய, விஜிதான் காரணம் என நினைத்த வெங்கடராமன், மறுநாளே அதாவது 22-ம் தேதி இரவு விஜியை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு போலீசிலும் சரணடைந்தார். இப்போது வழக்கு கோர்ட்டில் நடந்து வருகிறது.
2 உயிர்கள்
இந்த கொலை வழக்கில் எப்படியும் தனக்கு அதிகமான தண்டனை கிடைக்கும் என்று பயந்துபோன வெங்கடராமன் மனமுடைந்து விஷம் குடித்து தற்கொலை செய்துக் கொண்டுள்ளார் என கூறப்படுகிறது. டிக்டாக் ஆப்பை தடை செய்ய நீதிமன்றம் எவ்வளவோ முயன்றும் பலனில்லாமல் போய்விட்டது. இப்போது இந்த ஆப்பில் தேவை இல்லாத விஷயங்களை பேச போய், 2 உயிர்கள் அநியாயமாக பறிபோனதுதான் மிச்சம்!