பயங்கரம்.. திருவண்ணாமலையில் 10ம் வகுப்பு மாணவனை கண்மூடித்தனமாக தாக்கும் சக மாணவர்கள்.. பகீர் வீடியோ
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அடுத்த கீழ்பெண்ணாத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில்,10ம் வகுப்பு மாணவனை, 12ம் வகுப்பு படிக்கும் மாணவன் மற்றும் முன்னாள் மாணவனும் கண்மூடித்தனமாகத் தாக்கி உள்ளார்கள். இந்த பகீர் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது..
Recommended Video
பள்ளிகளில் முன்பெல்லாம் சண்டை நடந்தால் சாதாரணமாக இருக்கும். அதன்பிறகு ஒற்றுமையாக பேசிக்கொள்வார்கள். வன்முறையின் பாதையில் பயணிக்ககூடாது என்பதற்காக ஆசிரியர்களும் கண்டித்து திருத்துவார்கள். ஆசிரியர்களை கண்டால் பயம் கலந்த மரியாதை இருக்கும். இதுதான் நடைமுறையாக இருந்தது.
இப்போதும் ஆசிரியர்கள் மாணவர்களிடையே ஒழுக்கத்தையும், நல்ல பண்புகளையும் விதைக்க போராடி வருகிறார்கள். ஆனால் முன்பு போல் ஆசிரியர்கள் கண்டிப்பு காட்ட முடியவில்லை. அத்துடன் துரதிர்ஷ்டவசமாக கல்வி கற்கும் காலச்சூழல்கள் முன்பு போல் இல்லை. மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டால் வன்மம் ஏற்பட்டு பெரும் பிரச்சனையாகவும் சில நேரங்களில் உருமாகிறது. அப்படி ஒரு சம்பவம் தான் திருவண்ணாமலையில் நடந்துள்ளது.
மோதல்
திருவண்ணாமலை அடுத்த கீழ்பெண்ணாத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு 10ம் வகுப்பு படிக்கும் மாணவனின் அண்ணனுக்கும், அதே பள்ளியில் 12ம் வகுப்பு படிக்கும் இன்னொரு மாணவனுக்கும் இடையே சிறுசிறு தகராறுகள் ஏற்பட்டிருக்கிறது.
தாக்குதல்
அந்த தகராறில், கடந்த 16ம் தேதி பள்ளி வளாகத்தில் வைத்து 10ம் வகுப்பு மாணவனுடன் 12ம் வகுப்பு மாணவன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். உச்சகட்டமாக 10ம் வகுப்பு மாணவனை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார். கூடவே முன்னாள் மாணவன் ஒருவரும் தாக்கியுள்ளார். இதை சக மாணவன் வீடியோ எடுத்திருக்கிறார்.
போலீசார் விசாரணை
இது குறித்து , தகவல் அறிந்த போலீசார், தலைமை ஆசிரியர் முன்னிலையில் மாணவர்களிடம் பேசினார்கள். பின்னர் மாணவர்கள் நான்கு பேரின் எதிர்காலம் கருதி எச்சரித்து அனுப்பி வைத்தனர். இந்த நிலையில்தான், மாணவன் தாக்கப்பட்ட வீடியோ காட்சி, நேற்று காலை முதல் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது
அதிர்ச்சி வீடியோ
இதனால் திருவண்ணாமலை மாவட்ட கல்வித்துறை, முழுமையான விசாரணை நடத்த உத்தரவிட்டது- இதுபற்றி கீழ்பெண்ணாத்தூர் போலீசார் விசாரித்து வருகிறார்கள். இதற்கிடையே சம்பந்தப்பட்ட 4 மாணவர்களையும் பள்ளி தலைமையாசிரியர் ஒரு வாரத்திற்கு சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டிருக்கிறார்.