அதிர்ச்சி சம்பவம்.. சாமியார் பேச்சை கேட்டுக் கொண்டு 16 வயது சிறுவனை ஜீவசமாதி செய்த குடும்பம்
திருவண்ணாமலையில் சிறுவனை ஒரு குடும்பம் ஜீவசமாதி செய்துள்ளது.
Recommended Video
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே 16 வயது சிறுவனை ஒரு சாமியாரின் பேச்சைக் கேட்டு ஜீவ சமாதி செய்த குடும்பத்தினரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
வழக்கமாக சாமியார்கள், சித்தர்கள்தான் அந்தக் காலத்தில் ஜீவசமாதி ஆவது வழக்கமாக இருந்தது. இப்போதெல்லாம் அது போல நடப்பதில்லை. நடப்பதாக தெரிந்தால் காவல்துறையினர் விரைந்து வந்து நடவடிக்கை எடுத்து விடுவார்கள்.
இந்த நிலையில் திருவண்ணாமலை அருகே 16 வயது சிறுவனை ஜீவசமாதி செய்துள்ள செயல் அனைவரையும் அதிர வைத்துள்ளது. இதை லைவாக வீடியோவிலும் எடுத்து சமூக வலைதளங்களில் போட்டுள்ளது இன்னும் அதிர வைப்பதாக உள்ளது.
பொன்பரப்பி கலவரம்: டிக்டாக் ஆப்பில் சர்ச்சைக்குரிய கருத்து பதிவிட்ட இளைஞர் கைது
16 வயது சிறுவன்
திருவண்ணாமலை அருகே உள்ளது செண்பகத்தோப்பு ராமநாதபுரம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் ஆசிரியர் ஹரிகிருஷ்ணன். இவருக்கு தன நாராயணன் என்ற 16 வயது மகன் இருந்தான். இவனுக்கு உடல் நிலை சரியில்லை. இதனால் படிப்பை தொடர முடியாமல் வீட்டிலேயே இருந்து வந்தான்.
ஜல சமாதி ஆகி விட்டதாக
இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு தனது வீட்டுக்கு அருகே உள்ள கிணற்றின் பக்கத்தில் நின்றிருந்தபோது வலிப்பு வந்து தவறி கிணற்றில் விழுந்து விட்டான் தன நாராயணன். இதில் தலையில் அடிபட்டது. தீயணைப்புப் படையினர் விரைந்து வந்தனர். 108 ஆம்புலன்ஸும் வந்தது. அதில் இருந்தவர்கள் சிறுவனை பரிசோதித்து அவன் இறந்து விட்டதாக கூறினர்.
சாமியார் ஆலோசனை
இந்த நிலையில் அந்தப் பக்கமாக ஒரு சாமியார் வந்துள்ளார். அவர் அந்தப் பகுதியில் பிரபலமானவர் போல. அவர் வந்து என்ன ஏது என்று பார்த்து விட்டு தன நாராயணன் இறக்கவில்லை. நாடி இருக்கு. அவன் ஜீவசமாதி அடைய வேண்டும் என்று கூறி விட்டுப் போயுள்ளார். இதைக் கேட்ட குடும்பத்தினர் கொஞ்சமும் யோசிக்காமல் ஜீவசமாதிக்கான ஏற்பாடுகளைச் செய்தனர்.
ஜீவ சமாதி
பெரிய பள்ளம் தோண்டி அதில் சிறுவனை அமர வைத்த நிலையில் வைத்து மண்ணைப் போட்டு மூடி விட்டனர். அந்த சிறுவனுக்கு உண்மையிலேயே நாடி இருந்திருந்தால் அவனை மீண்டும் மருத்துவமனைக்குக் கொண்டு போய் சிகிச்சை அளித்திருந்தால் ஒருவேளை காப்பாற்றியிருக்கலாமோ என்னவோ.
என்ன சொல்வது
சாமியார் பேச்சைக் கேட்டுக் கொண்டு சிறுவனை ஜீவசமாதி செய்த பெற்றோரின் செயலை என்னவென்று சொல்வது. இந்த சம்பவத்தால் அந்தப் பகுதியே பரபரப்பாகிக் கிடக்கிறது. இப்போது அந்த சமாதிக்கு பலரும் வந்து சிறுவன் புதைக்கப்பட்ட இடத்தில் வணங்கிச் செல்கின்றனராம். அந்த இடத்திற்கு வருவோர் வசதிக்காக பெரிய சைஸ் போர்டெல்லாம் கூட வைத்து விட்டனராம்.