திருவண்ணாமலை கிரிவல பாதையில் ஆந்திர சாமியார் நிர்வாண பூஜையை தடுத்து நிறுத்திய அதிகாரிகளால் பரபரப்பு
திருவண்ணாமலை: திருவண்ணாமலை கிரிவல பாதையில் ஆந்திர சாமியார் ஒருவர் நிர்வாணமாக பூஜை செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் அந்த பூஜையை தடுத்து நிறுத்தினர்.
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் சூர்ய பிரகாசானந்த சாமியார். இவர் எப்போதும் நிர்வாண நிலையிலேயே இருப்பார். இந்நிலையில் கடந்த 23-ஆம் தேதி முதல் பிப்ரவரி 10-ஆம் தேதி வரை திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள அஷ்டலிங்கங்களில் பாசுபத யாகம் நடத்த முடிவெடுத்தார்.
அதன்படி கிரிவலப் பாதையில் உள்ள ஆந்திர ஆசிரமத்தின் ஒரு பகுதியில் நிர்வாண யாகம் நடத்தி வந்துள்ளார். இந்த பூஜையில் ஆண், பெண் இருபாலரும் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட கோட்டாட்சியர் உமா மகேஸ்வரி தலைமையிலான வருவாய்த் துறை மற்றும் காவல் துறையினர் நேரில் சென்று சாமியாரிடம் விசாரணை நடத்தினர்.
இதனால் போலீஸார் மற்றும் சாமியார் தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதனால் வாக்குவாதமும் தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. இதையடுத்து நிர்வாண பூஜையை அதிகாரிகளும் போலீஸாரும் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.