மஞ்சள் நீராட்டு விழாவுக்கு சென்றபோது கோரவிபத்து.. 6 பேர் பலி.. 30 பேர் படுகாயம்.. செய்யாறில்!
செய்யாறு அருகே நடைபெற்ற சாலை விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்
செய்யாறு: மஞ்சள் நீராட்டு விழாவில் கலந்து கொள்ள வேனில் சென்றவர்கள் எதிரே வந்த லாரி மோதியதில் 6 பேர் உயிரிழந்தனர். 30-க்கும் மேற்பட்டோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் மஞ்சள்நீராட்டு விழா ஒன்று நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொள்வதற்காக காஞ்சிபுரம் மாவட்டம் மாகரல் என்ற கிராமத்தில் இருந்து 50-க்கும் மேற்பட்டோர் ஒரு வேனில் கிளம்பினார்கள்.
செய்யாறு அருகே தும்பை என்ற இடத்தில் வேன் வந்து கொண்டிருந்தது. அப்போது செங்கல் லாரி ஒன்று எதிரே வந்தது. அந்த லாரியின் மேல் 4 தொழிலாளர்கள் உட்கார்ந்திருந்தனர்.
வேன் நொறுங்கியது
நிலைதடுமாறிய லாரி, திடீரென்று வேனின் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. நேருக்குநேர் லாரியும், வேனும் பயங்கரமாக மோதிக் கொண்டதில், வேன் அப்பளம் போல் நொறுங்கியது, லாரி குப்புற கவிழ்ந்து விழுந்தது.
வலியால் அலறினர்
இந்த இடிபாட்டில் வேனில் இருந்தவர்கள் முற்றிலும் சிக்கி கொண்டு வலியால் அலறி கூச்சலிட்டனர். சத்தத்தை கேட்டு பொதுமக்கள் போலீசுக்கு தகவல் அளித்ததுடன், ஓடிவந்து இடிபாடுகளில் சிக்கி இருந்தவர்களை மீட்க முயன்றனர்.
6 பேர் பலி
விபத்து நடந்த இடத்துக்கு விரைந்து வந்த போலீசாரும், காயமடைந்தவர்களை மீட்கும் வேலையில் இறங்கினார். ஆனால் வாகனங்கள் ஒன்றோடொன்று மோதி இடித்துகொண்ட வேகத்திலேயே வேனில் இருந்த 4 பெண்கள் உட்பட டிரைவரும் உடல்நசுங்கி இறந்துவிட்டனர். ஒருவர் லாரிக்கு அடியில் சிக்கி இறந்துவிட்டார்.
தீவிர சிகிச்சை
வேனில் இருந்த 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் செய்யாறு அரசு ஆஸ்பத்திரி மற்றும், செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த கோர விபத்து காரணமாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.