ஆரணி சேவூர் ஊராட்சியில் ஒரு ஓட்டுக்கு 25 கிலோ அரிசி மூட்டை.. அதிமுக வேட்பாளர் வழங்கியதால் பரபரப்பு
ஆரணி: ஆரணியில் சேவூர் ஊராட்சியில் வாக்களித்த மக்களுக்கு அதிமுக சார்பில் ஒரு ஓட்டுக்கு 25 கிலோ அரிசி மூட்டை வழங்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 18 ஊராட்சி ஒன்றியங்களுக்கான தேர்தலில் முதற்கட்டமாக 9 ஒன்றியங்கள் காண தேர்தல் கடந்த 27ஆம் தேதி நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து இரண்டாம் கட்ட தேர்தலானது இன்று காலை சரியாக 7 மணிக்கு தொடங்கி நடைபெற்றது.
காலை முதலே உள்ளாட்சி ஒன்றியங்களுகான தேர்தல் மந்தமான நிலையில் நடைபெற்றது. 11 மணி நிலவரப்படி 18.94 சதவீத வாக்குகளே பதிவாகியிருந்தது.
போட்டி
இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சேவூர் கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் அதிமுக ஆதரவு பெற்ற வேட்பாளர் மற்றும் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர், ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் ஆகியோர் இணைந்து ஒரு ஓட்டுக்கு 25 கிலோ அரிசி என்று சேவூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் ரைஸ்மில்லில் வைத்து கொடுத்ததாக சொல்லப்படுகிறது.
ரைஸ்மில்
இதனையடுத்து சேவூர் பகுதியைச் சேர்ந்த மக்கள் அந்த ரைஸ் மில்லை நோக்கி படையெடுத்தனர். தகவலறிந்து அங்கு வந்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் அந்த ரைஸ்மில்லில் விசாரணையை மேற்கொண்டனர்.
விசாரணை
தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வருவதைக் கண்ட பொதுமக்கள் மற்றும் ரைஸ்மில்லில் இருந்த ஊழியர்கள் அந்த பகுதியில் இருந்து வெளியேறினர். இதனை தொடர்ந்து அந்த ரைஸ்மில்லில் அரிசி மூட்டைகள் எதற்காக கொடுக்கப்பட்டது என்ற விசாரணை நடைபெற்று வருகிறது.
பரபரப்பு
சேவூர் தொகுதி அதிமுக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திர உடைய தொகுதி ஆகும். ஒரு அமைச்சரின் தொகுதியிலேயே ஒரு ஓட்டுக்கு 25 கிலோ அரிசி என அதிமுக ஆதரவு பெற்ற வேட்பாளர்கள் வழங்கியதாக சொல்லப்பட்டதை அடுத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.