டெண்டர் விவகாரம்... அமைச்சரிடம் வாக்குவாதம் செய்த அதிமுக நிர்வாகிகள்
திருவண்ணாமலை: இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனிடம் அதிமுக நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டது திருவண்ணாமலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அரசு ஒப்பந்தப் பணிகள் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் வழங்கப்படுவதாக கூறி அவர்கள் அமைச்சரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் ஆலோசனைக் கூட்டத்தில் இருந்து பாதியிலேயே அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வெளியேறிவிட்டார்.
ஆலோசனைக் கூட்டம்
உள்ளாட்சித் தேர்தல் பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தலைமையில் திருவண்ணாமலையில் நடைபெற்றது. அதில் பங்கேற்ற அதிமுக நிர்வாகிகள், டெண்டர் விவகாரம் குறித்து பேசத் தொடங்கினர். தேர்தல் பணிகளுக்கு மட்டும் நாங்கள் வேண்டும், டெண்டர் போட நாங்கள் வேண்டாமோ? என குரல் எழுப்பினர்.
அமைச்சர் சமாதானம்
ஆலோசனைக் கூட்டத்தில் திடீரென்று நிர்வாகிகள் இப்படி வெகுண்டெழுவார்கள் என நினைத்துப் பார்க்காத அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், அவர்களை சமாதானம் செய்ய முயற்சித்துப் பார்த்தார். ஆனால் நிலைமை கட்டுக்குள் வருவதாக தெரியவில்லை என்றவுடன் அந்த நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே வெளியேறினார்.
டெண்டர் விவகாரம்
கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருவண்ணாமலை நகரில் கால்வாய் பணிகளுக்கான டெண்டர் விடப்பட்ட நிலையில், அதனை நிர்வாகிகள் அனைவருக்கும் பிரித்துக்கொடுக்காமல் தனக்கு வேண்டியவர்களுக்கு மட்டும் அமைச்சர் வழங்கியதாக புகார் கூறப்படுகிறது.
அமைச்சரிடம் கேள்வி
மேலும், ரூ.10 கோடி மதிப்பிலான ஒப்பந்தப் பணிகளை ஏன் நீங்கள் பிரித்துக்கொடுக்கவில்லை என அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனை நோக்கி நிர்வாகிகள் கேள்விகள் எழுப்பியது குறிப்பிடத்தக்கது. இதனால் உள்ளாட்சித் தேர்தல் பணிகளில் தி.மலை மாவட்ட அதிமுக நிர்வாகிகளை முழு மனதுடன் ஈடுபடுவது கேள்விகுறியாகியுள்ளது.