கூட்டணிக்காக தேமுதிக கெஞ்சவில்லை..2011இல் நாம் இல்லையென்றால்..அதிமுக இன்று இருக்காது.. சுதீஷ் பேச்சு
திருவண்ணாமலை: தேர்தல் கூட்டணிக்காக தேமுதிக கெஞ்சவில்லை, அதிமுகவே கெஞ்சுகிறது என்று கூறியுள்ள அக்கட்சியின் துணை செயலாளர் எல்.கே. சுதீஷ் 2011ஆம் ஆண்டு தேர்தலில் கூட்டணியில் தேமுதிக இல்லையென்றால் இன்று அதிமுக என்ற கட்சியே இருந்திருக்காது என்றும் அவர் கூறியுள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு வரும் ஏப்ரல் 6ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. அதேபோல ஐந்து மாநில தேர்தல்களுடன் வாக்கு எண்ணிக்கை வரும் மே மாதம் 2ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தமிழ்நாட்டிலுள்ள அனைத்து முக்கிய கட்சிகளுடன் தங்கள் கூட்டணியை இறுதி செய்யும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன. அதிமுக தற்போதுவரை பாமகவுடன் மட்டும் கூட்டணியை உறுதி செய்துள்ளது. அக்கட்சிக்கு 23 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
முதல்வரை முந்திய துணை முதல்வர்... கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டார் ஓபிஎஸ்
கூட்டணி பேச்சுவார்த்தை
பாஜக, தேமுதிக உள்ளிட்ட மற்ற கட்சிகளுடனும் கூட்டணி பேச்சுவார்த்தையை அக்கட்சியினர் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். இருப்பினும், எந்தக் கட்சியுடனும் இதுவரை உடன்பாடு எட்டப்படவில்லை. பாஜக கூட்டணி தொடர்பாக உள் துறை அமைச்சர் அமித் ஷாவுடன் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆலோசனை நடத்திருந்னர். இரண்டாம் நாளாக நேற்றும் பேச்சுவார்த்தை நடைபெற்றது, அதிலும் தொகுதி பங்கீடு இறுதியாகவில்லை.
நாம் கெஞ்சவில்லை
அதேபோல தேமுதிகவுடனும் கூட்டணி அமைப்பதில் இழுபறி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தின் ஆரணி அருகே தேமுதிக சார்பில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய தேமுகித துணை செயலாளர் எல்.கே. சுதீஷ், "சட்டமன்ற தேர்தல் கூட்டணிக்காக அதிமுகவிடம் நாம் கெஞ்சவில்லை. அவர்கள்தான் நம்மிடம் கெஞ்சுகின்றனர்.
மாநிலங்களவை சீட்
மாநிலங்களவை எம்.பி. சீட் தருவதாகக் கூறுகிறார்கள்; ஆனால் அதற்காக நாங்கள் என்றுமே ஆசைப்பட்டதில்லை. தேமுதிக எந்தக் கூட்டணியில் உள்ளதோ, அந்தக் கூட்டணியே வெற்றி பெறும். 2011ஆம் ஆண்டு தேர்தலில் தேமுதிக அதிமுக கூட்டணியில் இல்லையென்றால் இன்று அதிமுக என்ற கட்சியே இருந்திருக்காது. விஜயகாந்த் தலைமையிலான கூட்டணி அமைந்தால் அதில் சேர பல கட்சிகள் தயாராக உள்ளன" என்று பேசினார்.
வன்னியர் இட ஒதுக்கீடு
மேலும், வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது தவறில்லை என்றும் ஆனால் மற்ற சாதிகள் என்ன செய்வார்கள் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். அதிமுக மற்றும் தேமுதிக கட்சிகளுக்கு இடையே கூட்டணி அமைப்பதில் இழுபறியில் உள்ள நிலையில் எல்.கே. சுதீஷின் இந்த பேச்சு, அதிமுகவினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.