அமைச்சருக்கு யார் முதலில் சால்வை அணிவிப்பது..? கைகலப்பில் ஈடுபட்ட அதிமுக நிர்வாகிகள்..!
திருவண்ணாமலை: அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் பங்கேற்ற நிகழ்ச்சியில் அவருக்கு யார் முதலில் சால்வை அணிவிப்பது என்ற விவகாரத்தில் அதிமுகவினரிடையே கைகலப்பு ஏற்பட்டது.
செஞ்சி அருகே அம்மா மினி கிளினிக் தொடக்க நிகழ்ச்சியில் நடைபெற்ற இந்த மோதலால் அதில் கலந்துகொண்ட பொதுமக்கள் பாதியில் வெளியேறினர்.
அவர்களை இருக்கையில் அமருமாறு முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி கேட்டுக்கொண்டும் அதனை மக்கள் சட்டை செய்யவில்லை.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டம் செஞ்சி அருகே அம்மா மினி கிளினிக் தொடக்க நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அந்த நிகழ்ச்சிக்கு முன் கூட்டியே சென்றுவிட்ட மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி அமைச்சருக்காக மேடையில் தனி ஆளாக அமர்ந்து காத்திருந்தார். பொதுமக்களும் இரண்டு மணி நேரமாக காக்க வைக்கப்பட்டனர்.
யார் முதலில்?
இந்நிலையில் விழா மேடைக்கு அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வந்ததும் அவருக்கு சால்வை அணிவிக்க உள்ளூர் அதிமுகவினர் போட்டி போட்டனர். அது வாக்குவாதமாக மாறி கைகலப்பு வரை நீண்டது. இதனால் அந்த இடத்தில் பதற்றம் ஏற்பட்டத்தை அடுத்து பொதுமக்கள் இருக்கைகளை காலி செய்து வீடுகளுக்கு திரும்பத் தொடங்கினர்.
மக்கள் ஓட்டம்
இதனைப் பார்த்து பதறிப்போன மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான அக்ரி கிருஷ்ணமூர்த்தி மைக்கை பிடித்து மக்களை கலைந்து செல்ல வேண்டாம் என்றும் எல்லோரும் இருக்கையில் அமருங்கள் எனவும் கெஞ்சினார். ஆனால் அதனை மக்கள் கேட்கத் தயாராக இல்லை. இதையடுத்து உள்ளூர் அதிமுகவினரை வைத்து மினிகிளினிக் திறப்பு விழா நடத்தி முடிக்கப்பட்டது.
அரசு விழா
அம்மா மினி கிளினிக் தொடக்க விழா என்பது அரசு நிகழ்ச்சி. அப்படியிருந்தும் அதனை அதிமுக நிகழ்ச்சி போல் நடத்தியுள்ளதாக செஞ்சி திமுகவினர் குற்றஞ்சாட்டியுள்ளனர். மேலும், ஏற்கனவே ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியில் இருந்த மருத்துவரை மினி கிளினிக் மருத்துவராக பணியில் அமர்த்தி விளம்பரம் தேடிக்கொள்வதாகவும் புகார் கூறியுள்ளனர்.