தீபத் திருவிழா... அரசியல் வி.ஐ.பி.க்களுக்கு ராஜமரியாதை தந்த அறநிலையத்துறை
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் நடைபெற்ற கார்த்திகை தீபத் திருவிழாவில் அனைத்து அரசியல் கட்சிகளில் இருந்தும் முக்கிய வி.ஐ.பி.க்கள் கலந்துகொண்டனர்.
அதிமுக, பாஜக, திமுக, பாமக என அனைத்துக் கட்சி வி.ஐ.பி.க்களுக்கும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் சிறப்பு வசதிகளை ஏற்பாடு செய்து கொடுத்திருந்தனர்.
அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனும் திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் கம்பனும் நேருக்கு நேர் சந்தித்த போது இருவரும் பரஸ்பர வணக்கம் தெரிவித்துக்கொண்டனர்.
மாவட்ட நிர்வாகிகள் கையில் முடிவு... பொன்.ராதாகிருஷ்ணன் புதிய முயற்சி
அண்ணாமலையார்
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் நேற்று மாலை மகா தீபம் ஏற்றப்பட்டது. அந்த நிகழ்வில் கலந்துகொள்வதற்காக கட்சி பேதங்களின்றி அனைத்து அரசியல் கட்சிகளில் இருந்து முக்கிய வி.ஐ.பி.க்கள் பலர் கலந்துகொண்டனர்.
திமுக-அதிமுக
முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு கார்த்திகை தீப விழாவில் கலந்துகொள்ளவில்லை என்றாலும், அவரது மகன் கம்பன் கலந்துகொண்டார். மேலும், முன்னாள் அமைச்சர்கள் கே.என். நேரு, கு.பிச்சாண்டி, சேகர்பாபு எம்.எல்.ஏ., என பல திமுக முன்னணி நிர்வாகிகள் கார்த்திகை தீபத்திருவிழாவில் கலந்துகொண்டனர். இதேபோல், அதிமுகவில் இருந்தும் கோகுல இந்திரா உள்ளிட்ட முக்கிய தலைமைக்கழக நிர்வாகிகளும், எம்.எல்.ஏக்களும் கலந்துகொண்டனர்.
அறநிலையத்துறை
அரசியக் கட்சி நிர்வாகிகளுக்கு இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தரப்பில் விசேஷ கவனிப்பு அளிக்கப்பட்டது. பாதை ஒதுக்கிக் கொடுப்பது முதல் சகல பணிகளையும் அறநிலையத்துறை அதிகாரிகள் விழுந்து விழுந்து செய்து கொடுத்தனர்.
நிர்வாகிக்கு இடம்
இதில் குறிப்பிட வேண்டிய விவகாரம் என்னவென்றால், அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனுடன் சரிக்கு சமமாக அமர்ந்து மகா தீபத்தை கண்டு மகிழ்ந்தார் கோவையை சேர்ந்த பாஜக மாநில நிர்வாகி நாகராஜ். ஆனால், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி அமர இடமின்றி ஓரமாக நின்றுகொண்டிருந்தார்.