இளம் வயது.. கோடிக்கணக்கில் சொத்து.. ஆனால் இவர்களின் முடிவு இப்படியாகி விட்டதே!
தொழிலதிபர்களின் 2 மகள்கள் ஜெயின் துறவிகளாக மாற போகிறார்கள்.
Recommended Video
திருவண்ணாமலை: "அடிச்சு பார்த்தோம்... அழுது பார்த்தோம்.. எதுவுமே வேலைக்காகவில்லை.. ஒரு குறையும் இல்லாம பாசத்தை கொட்டி வளர்த்த எங்கள் மகள்கள் இப்படி துறவறம் போவாங்கன்னு நினைச்சுகூட பார்க்கல" என்கிறார்கள் 2 தொழிலதிபர்களும்.
கவுதம்குமார், அரவிந்த்குமார்!! இவர்கள்தான் அந்த தொழிலதிபர்கள். திருவண்ணாமலையை சேர்ந்த இவர்கள் இருவரும் சகோதரர்கள். ஜெயின் மதத்தை சேர்ந்தவர்கள். கவுதம்குமாருக்கு 2 மகள், ஒரு மகன் உள்ளனர். அதேபோல, அரவிந்த்குமாருக்கு 2 மகள், ஒரு மகன் உள்ளனர்.
துறவற முடிவு
இதில் கவுதமின் 2-வது மகளான பிரெக்ஷாவும், அரவிந்தின் 2-வது மகளான சுவேதாவும் ரொம்பவே நெருக்கம். ஒன்றாகவே வளர்ந்து, ஒரே ஸ்கூல், ஒரே காலேஜ் என இணைந்தே படித்தார்கள். இருவருமே திறமைசாலிகள்தான். நன்றாக படிக்கவும் கூடியவர்கள். பிரெஷா எம்.பி.ஏ. வும், சுவேதா சி.ஏ.வும் படித்துள்ளார்கள். இருவருக்கும் வயது 26. இவர்கள் இருவரும்தான் தற்போது துறவிகளாக போக போகிறார்கள்.
உறுதியாக நின்றனர்
இதுகுறித்து இவர்களின் தந்தை செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, "22 வயசு இருக்கும். அப்பவே துறவறம் போக போகிறோம் என்று இரண்டு பேரும் சொன்னார்கள். ஆனால் நாங்கள் அதை பெரிசா எடுத்துக்கல. ஆனால் 2 பேரும் திரும்ப திரும்ப அதை பத்தியே பேசி அந்த விஷயத்தில் உறுதியாக இருந்த பிறகுதான் விஷயம் எங்களுக்கு புரிந்தது.
மாற்றி கொண்டோம்
அதனால் அதிர்ச்சியான நாங்கள் எங்கள் பெண்கள் மனசை மாற்ற அவர்களை அடித்து பார்தோம், மிரட்டி கேட்டோம், அன்பாக எடுத்து சொன்னோம், கண்ணீருடன் கெஞ்சி பார்தோம், ஆனால் எதுவுமே அவர்கள் மன உறுதி முன்பு நிற்கவில்லை. கடைசியில் நாங்கள்தான் அவர்களுக்காக எங்கள் மனசை மாற்றிக் கொண்டோம். இப்படி துறவு போக வேண்டும் என்றால், எம்.ஏ.ஜெயினினாலஜி படிக்க வேண்டும். இதற்காக ராஜஸ்தானில் உள்ள மதக்கல்லூரியில் சேர்த்து அந்த படிப்பை 3 ஆண்டுகள் 8 மாதம் படிக்க வைத்தோம். இப்போது இருவரும் அதற்கான சான்றினை பெற்று விட்டார்கள்.
பிச்சை எடுக்க வேண்டும்
துறவறம் செல்வது ஒன்றும் சாதாரண விஷயமல்ல. நிறைய கட்டுப்பாடுகள் இருக்கு. தங்கள் பணிகளை தாங்கே செய்து கொள்ள வேண்டும். எங்கு போனாலும் நடந்தே போக வேண்டும். பிச்சை எடுத்து தான் சாப்பிட வேண்டும். அதுவும் சாயங்காலம் 6 மணிக்கு மேல் சாப்பிட கூடாது. 3 ஆடைகளுக்கு மேல் வைத்திருக்க கூடாது. மழை பெய்தாலும், குளிர் அடித்தாலும், வெயில் அடித்தாலும் இந்த ஆடைகளைதான் அணிய வேண்டும்.
வழியனுப்பும் விழா
குடும்பத்தினருடன் பாசம், பந்தம் என்ற ஒட்டு உறவு இருக்கக்கூடாது. 3 மாதத்திற்கு ஒருமுறை தங்களது தலைமுடியை தாங்களாகவே பிடுங்கி எடுத்துவிட வேண்டும். இவர்கள் இருவரையும் வழியனுப்பும் விழா வருகிற 26-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவிற்கு மாவட்ட நீதிபதி, கலெக்டர் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர். இவ்வாறு அப்பெண்களின் தந்தை கூறினார்.
கோடிக்கணக்கான சொத்து
கோடிக்கணக்கான சொத்துக்களின் வாரிசான இந்த பெண்கள், பிச்சையெடுக்கவும் தயாராக உள்ள உறுதியை அறிந்த மாவட்ட மக்கள் நெகிழ்ந்துபோய் உள்ளனர்.