பெற்றோரால் கைவிடப்பட்ட குழந்தை...பெயர் சூட்டிய கலெக்டர்
திருவண்ணாமலை : தங்களால் வளர்க்க முடியவில்லை என பெற்றோரால் முட்புதரில் வீசப்பட்ட குழந்தைக்கு மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி பெயர் சூட்டி, குழந்தைகள் நலக் குழுவிடம் ஒப்படைத்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகில் உள்ள செ.நாச்சகப்பட்டு கிராமத்தில் முட்புதர் அருகில், பிறந்து ஒரு நாளே ஆன ஆண் குழந்தை கண்டெடுக்கப்பட்டது. பெற்றோரால் கைவிடப்பட்டு ஆதரவற்ற நிலையில் இருந்த குழந்தையை மீட்ட அப்பகுதி மக்கள், செங்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அந்த குழந்தைக்கு முதலுதவி அளிக்கப்பட்டது.
பின்னர் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் செயல்பட்டு வரும் பச்சிளம் கழந்தைகள் பிரிவில் ஜனவரி 18 அன்று சேர்க்கப்பட்டு மேல் சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைக்கு பின் அக்குழந்தை, அரசு மருத்துவமனையின் கீழ் செயல்பட்டு வரும் தொட்டில் குழந்தை திட்டத்தின் வரவேற்பு மையத்தில் குழந்தை பராமரிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று, அக்குழந்தைக்கு கலெக்டர் சந்தீப் நந்தூரி, இனியன் என பெயர் சூட்டினார். பிறகு அக்குழந்தையை, குழந்தை நலக் குழுமத்திடம் ஒப்படைந்தார்.