எல்லாத்தையும் எடுங்க.. ஸ்டாலின் ஸ்டிரிக்ட்.. திமுக முப்பெரும் விழா பேனர்கள் அதிரடியாக அகற்றம்!
திமுக தலைவர் ஸ்டாலினின் உத்தரவை அடுத்து திருவண்ணாமலை திமுக முப்பெரும் விழாவில் வைக்கப்பட்டு இருந்த பேனர்கள் அகற்றப்பட்டு உள்ளது.
திருவண்ணாமலை: திமுக தலைவர் ஸ்டாலினின் உத்தரவை அடுத்து திமுக முப்பெரும் விழாவிற்காக திருவண்ணாமலையில் வைக்கப்பட்டு இருந்த பேனர்கள் அகற்றப்பட்டு உள்ளது.
சென்னையை சேர்ந்த இளம்பெண் சுபஸ்ரீயின் மரணம் தமிழகத்தை உலுக்கி உள்ளது. சென்னையில் அதிமுகவினர் வைத்த பேனர் பைக்கில் செல்லும் போது மேலே விழுந்து சுபஸ்ரீ விபத்திற்கு உள்ளானார்.
கட் அவுட் முகத்தில் விழுந்ததால் நிலை தடுமாறிய சுபஸ்ரீ, லாரி டயரில் சிக்கி பலியானார். இந்த சம்பவம் தமிழகத்தையே அதிர வைத்து இருக்கிறது. பலர் இதற்கு எதிராக கண்டன குரல்கள் எழுப்பி உள்ளனர்.
பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறாக பேனர் வைத்தால் ஓராண்டு ஜெயில்.. தமிழக அரசு எச்சரிக்கை
சிக்கல்
இதையடுத்து திமுக முதல் கட்சியாக, இனிமேல் கட்சி விழாக்கள், கூட்டங்களில் பேனர் வைக்க கூடாது என்று உத்தரவிட்டது. அதேபோல் எந்த விழாக்களில் பேனர் வைக்கிறார்களோ, அந்த விழாக்களில் நான் கலந்து கொள்ள மாட்டேன் என்று திமுக தலைவர் ஸ்டாலின் அதிரடியாக கூறினார். அதன்பின் அதிமுக, பாமக, அமமுக கட்சிகளும் இதே நிலைப்பாட்டை எடுத்தது.
ஆனால் என்ன
ஆனால் திமுக தலைவர் ஸ்டாலின் இந்த அறிவிப்பை வெளியிடும் முன் திருவண்ணாமலையில் நடக்க உள்ள திமுகவின் முப்பெரும் விழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டுள்ளது. ஸ்டாலினின் அறிவிப்புக்கு முன்னே அங்கு இந்த விழாவிற்காக பேனர்கள் நிறைய வைக்கப்பட்டுள்ளது. திமுகவின் முப்பெரும் விழா இன்று திருவண்ணாமலையில் நடக்கிறது.
சர்ச்சை
இந்த நிலையில் இந்த பேனர் புகைப்படங்கள் இணையம் முழுக்க வெளியாகி பெரிய சர்ச்சையாகி உள்ளது. திமுக தலைவர் அவ்வளவு கண்டிப்பாக கூறியும், திமுகவின் பேனர்கள் வைத்துள்ளனர். என்ன நியாயம் இது. உடனே இதை அகற்ற வேண்டும் என்று பலர் இதற்கு எதிராக இணையத்தில் குரல் கொடுத்தனர்.
ஸ்டாலின் என்ன
திமுக தலைவர் ஸ்டாலினுக்கு இது தொடர்பாக புகார் சென்றுள்ளது. இதனால் உடனடியாக முப்பெரும் விழாவிற்காக வைக்கப்பட்ட பேனர்கள் அனைத்தையும் அகற்றும் படி ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதனால் திருவண்ணாமலையில் வைக்கப்பட்டு இருந்த முப்பெரும் விழா பேனர்கள், பேனர் வளைவுகள் எல்லாமும் அகற்றப்பட்டு இருக்கிறது.
எப்படி கொடிகள்
இரவோடு இரவாக அங்கு வைக்கப்பட்டு இருந்த 20க்கும் மேற்பட்ட பேனர்கள் அகற்றப்பட்டு உள்ளது. இதனால் பேனர்கள் இல்லாமல் கொடிகள், அலங்கார வளைவுகள் வைத்து ஸ்டாலினுக்கு வரவேற்பு கொடுக்க திமுகவினர் முடிவு செய்துள்ளனர். தவறுதலாக எங்காவது சிறிய பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதா என்று திமுகவினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.