ஏக குஷியில் எ.வ.வேலு... ஆரவாரமின்றி நடந்த அருணை மருத்துவக்கல்லூரி திறப்பு விழா..!
திருவண்ணாமலை: திருவண்ணாமலை திமுக தெற்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எ.வ.வேலு, சொந்தமாக மருத்துவக்கல்லூரி ஒன்றை நிறுவி அதற்கு திறப்பு விழாவும் கண்டுள்ளார்.
ஏற்கனவே பள்ளி, பொறியியல் கல்லூரி என பல கல்வி நிறுவனங்களை நடத்தி வரும் இவர், புதிதாக மருத்துவக் கல்லூரியையும் தொடங்கியுள்ளதால் திமுகவின் வலிமைப்படைத்த கல்வி தந்தைகளில் இவரும் ஒருவராகிவிட்டார்.
தனது 15 ஆண்டுகால ஆசை நிறைவேறிய மகிழ்ச்சியில் சுமார் 4 மாதங்களுக்கு பிறகு சென்னைக்கு விஜயம் தந்துள்ளார் எ.வ.வேலு.
அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி.. சாதித்துவிட்டோம், இறுதி கட்டத்தை எட்டிவிட்டோம்.. டிரம்ப் அதிரடி அறிவிப்பு
கல்வி நிறுவனங்கள்
திமுகவில் இரண்டாம் கட்டத் தலைவர்களில் மிக முக்கியமானவர் எ.வ.வேலு. இவர் திருவண்ணாமலை தெற்கு மாவட்டச் செயலாளராக இருந்தாலும் மாநில அளவிலான உட்கட்சி பஞ்சாயத்துக்களையும் கவனித்து வருகிறார். அருணை பொறியியல் கல்லூரி, ஜீவா வேலு ரெசிடென்சியல் பள்ளி, என பல பெயர்களில் கல்வி சாம்ராஜ்யங்களை நடத்தி வரும் வேலு, புதிதாக அருணை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை நேற்று தொடங்கியிருக்கிறார்.
அனுமதி பெறுவது
புதிய மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கிளீயரன்ஸ் சர்டிஃபிகேட் பெறுவது குதிரைக் கொம்பாக உள்ள சூழலில், மிக சாதுர்யமாக காய்களை நகர்த்தி தனது மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அவர் அனுமதி பெற்றிருக்கிறார். அதுவும் ஸ்டாலினுடன் ஒரே காரில் பயணிக்கும் அளவுக்கு நெருக்கமாக இருக்கும் எ.வ.வேலுவுக்கு, மத்தியில் பாஜக அரசும் தமிழகத்தில் அதிமுக அரசும் உள்ள நிலையில் மருத்துவக்கல்லூரிக்கு அனுமதி கிடைத்ததை பார்த்து திமுகவினரே புருவம் உயர்த்துகின்றனர்.
திருவண்ணாமலை
கடந்த ஏப்ரல் மாதம் முதல் திருவண்ணாமலையிலேயே தங்கி வந்த எ.வ.வேலு, கொரோனா பீதி காரணமாக சென்னை பக்கம் தலை காட்டவில்லை. ஆனால் கே.என். நேரு, பொன்முடி போன்றோரெல்லாம் திமுக தலைவர் ஸ்டாலினை அடிக்கடி சந்தித்து வந்தனர். இந்நிலையில் எந்தவித ஆரவாரமும் இல்லாமல் விளம்பரமும் இல்லாமல் தனது புதிய மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை திறந்து வைத்துவிட்டு இன்று சென்னைக்கு வந்து ஸ்டாலினை சந்தித்திருக்கிறார் வேலு.
பொருளாளர் ரேஸ்
திமுக பொருளாளராக உள்ள துரைமுருகன் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட்டு தேர்வாக உள்ளதால் அவர் வகித்து வரும் பொருளாளர் பதவியை பிடிக்க திமுகவில் போட்டி நிலவி வருகிறது. அந்தப் போட்டியில் பிரதான இடத்தில் இருப்பவர்கள் டி.ஆர்.பாலுவும், எ.வ.வேலுவும் தான். இதனிடையே இன்னும் ஒரு வாரத்தில் திமுக பொதுக்குழு கூடவுள்ள நிலையில் பொருளாளர் பதவியில் அமர எ.வ.வேலு முயற்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.