ஆரணி சட்டமன்ற தொகுதி முன்னாள் திமுக எம்எல்ஏ சிவானந்தம் கைது.. போலீஸ் அதிரடி
திருவண்ணாமலை: திமுகவைச் சேர்ந்த ஆரணி சட்டமன்ற தொகுதி முன்னாள் எம்எல்ஏ சிவானந்தம் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டார். 5 கோடி ரூபாய் கடன் தொகையை திருப்பி செலுத்தாத புகாரை ஏற்று சிவானந்தத்தை திருவண்ணாமலை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
திமுகவில் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் சிவானந்தம். இவர் ஆரணி சட்டமன்ற தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ ஆவார். இவரது மகனுக்கு திமுக தலைமை கடந்த 2016ம் ஆண்டு சீட் வழங்கியது. இதையடுத்து சிவானந்தம் தேர்தல் செலவுக்காக கரூரில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் 5 கோடி ரூபாய் கடன் வாங்கி இருந்தார்.
ஆனால் சிவானந்தம் இந்த கடனுக்கு உரிய முறையில் வட்டி கட்டாததுடன் கடனையும் திருப்பி செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் கடனை திருப்பி கேட்ட நிலையில் தருவதாக சொன்னவர், பல மாதங்களாக தரவில்லையாம். இதனால் வட்டியுடன் சேர்ந்து 8 கோடியாக உயர்ந்துள்ளது.
இதையடுத்து தனியார் நிதி நிறுவன அதிபர் திருவண்ணாமலை மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரை ஏற்று பிப்ரவரி 6ம் தேதி அதாவது இன்று அதிகாலை 1.30 மணி அளவில் சிவானந்தத்தை அவரது வீட்டில் வைத்து போலீசார் கைது செய்தனர். அவரை திருவண்ணாமலை அழைத்து சென்று தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.