அதிமுக அரசுக்கு பாராட்டும் நன்றியும் தெரிவித்த திமுக எம்.எல்.ஏ.. திருவண்ணாமலையில் வெடித்த சர்ச்சை..!
திருவண்ணாமலை: அதிமுக அரசின் திட்டங்களை பாராட்டியும், நன்றி தெரிவித்தும் பேசியுள்ள திமுக எம்.எல்.ஏ.வால் அக்கட்சியில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் கே.வி.சேகரன். இவர் தனது தொகுதியில் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமை தொடங்கி வைத்துப் பேசிய போது அதிமுக அரசு மீது தனது பாசமழையை பொழிந்திருக்கிறார். இது அங்கிருந்த திமுகவினருக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
எம்.ஜி.ஆர். ஒரு ஞானி என்றும் தாம் எதிர்க்கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.வாக இருந்தாலும் இப்போதைய அரசு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் திட்டங்களின் அடிப்படையில் வரவேற்பு தெரிவிப்பதாகவும் கூறினார். கே.வி.சேகரின் இந்தப் பேச்சைக் கேட்ட திமுகவினர் அப்போதே ஒருவருக்கு ஒருவர் இதைப்பற்றி விவாதிக்கத் தொடங்கினர்.
மேலும், சிறப்பு மருத்துவ முகாம் அமைத்ததற்காக தமிழக அரசுக்கு கே.வி.சேகரன் எம்.எல்.ஏ. நன்றி தெரிவித்துக்கொண்டார். வரும் தேர்தலில் திமுக ஆட்சி அமைப்பதற்காக மு.க.ஸ்டாலின் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வரும் சூழலில், திமுக எம்.எல்.ஏ. ஒருவரே அதிமுக அரசின் புகழ் புராணம் பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.
போளூர் தொகுதி எம்.எல்.ஏ. கே.வி.சேகரனின் இந்தப் பேச்சு திருவண்ணாமலை திமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.வரும் சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் தனக்கு வாய்ப்பு கிடைக்காது என்பதால் கே.வி.சேகரன் இப்படிப் பேசினாரா இல்லை மாவட்டச் செயலாளர் மீதான தனது அதிருப்தியை வெளிப்படுத்த இப்படிப் பேசினாரா என்பது தெரியவில்லை.
இதனிடையே திமுக எம்.எல்.ஏ. கே.வி.சேகரன் அதிமுக அரசுக்கு நன்றி தெரிவித்து பேசிய வீடியோ கிளிப்களை தலைமைக்கு அனுப்பத் தயாராகி வருகின்றனர் அவரது எதிர்தரப்பினர்.