எடப்பாடி பழனிச்சாமிக்கு சோப்பில் கோவில் கட்டிய ஓவிய ஆசிரியர் - கோரிக்கையை நிறைவேற்றுவாரா முதல்வர்
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு சோப்புகளைக் கொண்டு கோவில் கட்டியுள்ளார் அரசு பள்ளி ஓவிய ஆசிரியர் ஒருவர். பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது அவரது கோரிக்கையாகும்.
கள்ளக்குறிச்சி: நினைத்த காரியம் நிறைவேற வேண்டும் என்று சாமியிடம் வேண்டுதல் வைப்பார்கள். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கோவில் கட்டி புதிய கோரிக்கை வைத்துள்ளார் அரசு பள்ளியில் வேலை செய்யும் ஓவிய ஆசிரியர் ஒருவர். பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது அந்த ஆசிரியரின் வேண்டுகோளாகும்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே மணலூர்பேட்டை சேர்ந்த ஓவிய ஆசிரியர் செல்வம். இவர் திருக்கோவிலூர் அடுத்த சிவனார்தாங்கல் கிராமத்தில் அரசு நடுநிலைப் பள்ளியில் பகுதிநேர ஓவிய ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். துணி சோப்பு, குளியல் சோப்பு ஆகியவைகளைக் கொண்டு சிறு கத்தி பிளேடு பயன்படுத்தி சோப்பை செதுக்கி சிலை வடித்துள்ளார். இரண்டு நாட்களில் தமிழக முதல்வர் அவர்களுக்கு சிறு கோயில் ஒன்றை கட்டியுள்ளார்.
ஸ்ரீ எடப்பாடி பழனிச்சாமி ஆலயம் என்று அந்த கோவிலுக்கு பெயரிட்டிருக்கிறார். இது குறித்த செய்தியாளர்களிடம் பேசிய ஓவிய ஆசிரியர் செல்வம், கடந்த10 ஆண்டுகளாக பகுதிநேர ஆசிரியர்கள் 7,700 மாதச் சம்பளத்தில் பணிபுரிந்து வருகிறோம். தற்போது சுமார் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் இருக்கிறோம்.
வாழ்வாதாரம் கஷ்டமா இருக்கிறது மாண்புமிகு தமிழக முதல்வரை தெய்வமாக நினைத்து இந்தக் கோயில் கட்டினேன். பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யுமாறு வேண்டி கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார் செல்வம். பகுதி நேர ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவாரா முதல்வர் பழனிச்சாமி.