திருவண்ணாமலை மகா தீபத்தை மலை மீது காண 2500 பேருக்கு பாஸ்.. முதல் முறையாக போட்டோவுடன் கூடிய விநியோகம்
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் மகா தீபம் ஏற்றப்படுவதை முன்னிட்டு அதை மலை மீது ஏறி பார்க்க 2500 பக்தர்களுக்கு பாஸ் விநியோகிக்கப்படுகிறது.
பஞ்சபூத ஸ்தலங்களில் நெருப்பு ஸ்தலமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் விளங்குகிறது. இங்கு ஆண்டுதோறும் கார்த்திகை தீபத்திருவிழா வெகு விமரிசையாக நடத்தப்படும். அந்த வகையில் இன்றும் கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகிறது.
திருவண்ணாமலையில் பரணி தீபம், அண்ணாமலையார் தீபம், விஷ்ணு தீபம் உள்ளிட்ட 5 தீபங்கள் ஏற்றப்படுகிறது. டிசம்பர் 6 ஆம் தேதியான இன்று அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்டது. இந்த தீபத்திருவிழாவை காண்பதற்கு ஏராளமான பக்தர்கள் வருகை தருவர்.
திருவண்ணாமலை மகாதீபம்.. 1,150 மீட்டர் தீபத்திரிக்கு சிறப்பு பூஜை! கோயிலுக்கு குவியும் பக்தர்கள்
சிறப்பு பேருந்துகள்
இதற்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தீபத் திருநாளான இன்று 2500 பக்தர்கள் மட்டும் அண்ணாமலையார் மலை மீது ஏற உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அந்த வகையில் இன்று காலை 6 மணிக்கு முதலில் வருவோருக்கே முன்னுரிமை என்ற வகையில் 2500 பக்தர்களுக்கு பாஸ் வழங்கப்படுகிறது. இதற்காக திருவண்ணாமலை செங்கலம் சாலையில் உள்ள கலைஞர் கருணாநிதி அரசு கல்லூரியில் சிறப்பு மையம் திறக்கப்பட்டுள்ளது.
புகைப்படத்துடன் கூடிய அனுமதிச் சீட்டு
2500 பக்தர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அனுமதி சீட்டு வழங்கப்படுகிறது. மலை ஏற அனுமதி கோரும் பக்தர்கள் தங்களது ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை மற்றும் இதர பிற அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றின் நகலை சமர்ப்பித்து அனுமதி சீட்டு பெற்று கொள்ளலாம். பக்தர்கள் கோபுரம் அருகில் உள்ள வழியில் மட்டுமே மலை ஏற அனுமதிக்கப்படுவார்கள்.
மலை ஏற வழிமுறைகள்
மற்ற வழிகளில் மலை ஏற கண்டிப்பாக அனுமதி கிடையாது. மலையேறுவதற்கு பிற்பகல் 2 மணி வரை மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. மலை ஏறும் போது பக்தர்கள் தண்ணீர் பாட்டிலை மட்டுமே எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுவர். காலி தண்ணீர் பாட்டில்களை மலைகளில் வீசாமல் இறங்கி வரும் போது திரும்ப கொண்டு வந்துவிட வேண்டும்.
எதற்கெல்லாம் அனுமதி கிடையாது
எளிதில் தீப்பிடிக்கக் கூடிய கற்பூரம், பட்டாசு உள்ளிட்ட பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதி கிடையாது. மலை ஏறும் பக்தர்கள் கொண்டு செல்லும் நெய்யை அனுமதிக்கப்பட்ட கொப்பரையில் மட்டுமே ஊற்ற வேண்டும். வேறு எந்த இடத்திலும் நெய்யை ஊற்றவோ நெய் தீபம் ஏற்றவோ கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டம் கூடியுள்ளது
இன்று செங்கம் சாலையில் உள்ள கலைக் கல்லூரியில் பக்தர்களுக்கு பாஸ் வழங்கப்படுவதால் அங்கு ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர். போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்பதால் இத்தகைய கூட்டம் கூடியுள்ளது. இன்று மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்படுகிறது.