கட்டிய தாலியை அறுத்தெறிந்த ஈஸ்வரி.. அடுத்த நிமிடமே காதலனை கைப்பிடித்து அதிரடி!
ஆரணி அருகே கட்டாய தாலியை கழற்றி எறிந்தார் இளம் பெண்
Recommended Video
ஆரணி: தாலி கட்டின உடனேயே அதனை அறுத்து எறிந்துவிட்டு, தனக்கு பிடிச்ச காதலனை கல்யாணம் செய்து கொண்டுள்ளார் ஈஸ்வரி!
திருவண்ணாமலை மாவட்டம், கொடையம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த குமார் என்பவர் ஈஸ்வரி என்ற பெண்ணை காதலித்தார். ஈஸ்வரி அதே ஊரை சேர்ந்த பெண்தான். 5 வருடங்களுக்கும் மேலாக இவர்கள் காதலித்து வந்தனர்.
இருவரும் வேறு வேறு சாதி.. வழக்கமான எதிர்ப்பு வீட்டிலிருந்து கிளம்பியது. இதனால் ஈஸ்வரிக்கு அவரது வீட்டில் கட்டாய திருமணம் செய்து வைத்தனர்.
ஆனால் ஈஸ்வரி, கட்டாய தாலியை அறுத்து எறிந்துவிட்டு, காதலன் குமாரை அழைத்து கொண்டு, ஆரணியில் உள்ள பதிவாளர் அலுவலகத்தில் பதிவு திருமணம் செய்து கொண்டார். உடனடியாக சென்னைக்கும் குடியேறினார்.
இந்த விஷயம் ஈஸ்வரி வீட்டுக்கு தெரிந்ததையடுத்து ஆத்திரமடைந்த அவர்கள், குமாரின் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததுடன், குமாரின் குடும்பத்தாரையும் ஊருக்குள் சேர்க்கக்கூடாது என்று ஒதுக்கி வைத்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இதைதவிர ஒரு லட்சம் ரூபாய் அந்த குடும்பத்தினருக்கு அபராதமும் விதித்தார்களாம்.
எனவே, ஊருக்குள் செல்ல கிராமத்தினர் விதித்த தடையை நீக்க வேண்டும் என்றும், திருமணமான தங்களுக்கு உரிய பாதுகாப்பு வேண்டும் என்றும், திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர், மாவட்ட எஸ்பியிடம் மணமக்களே நேரடியாக புகார் அளித்துள்ளனர். கட்டாய தாலியை அறுத்து எறிந்துவிட்டு, இளம்பெண் ஒருவர் சாதி மறுப்பு திருமணம் செய்த கொண்ட சம்பவம் பெரிய வரவேற்பை பெற்றுவருகிறது.