லேட்டஸ்ட்... அறிமுகமாகிறது அத்தி வரத விநாயகர் சிலை... தீவிரமடையும் சிலை தயாரிப்பு
Recommended Video
திருவண்ணாமலை: விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் விநாயகர் சிலைகள் செய்திடும் பணி தீவிரமடைந்துள்ளது.
இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி வருகிற செப்டம்பர் மாதம் 2 ம்தேதி
கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவில் மண்ணால் தயாரிக்கப்பட்ட விநாயகரை பிரதிஷ்டை செய்து வணங்கி பின்னர் ஆற்றில் கரைப்பது வழக்கம்.
இதற்காக அரை அடி உயரம் முதல் 60 அடிக்கும் மேல் உயரங்களில் விநாயகர் சிலைகள் நாடு முழுவதும் பல இடங்களில் தயாராகிறது. குறிப்பாக மும்பை, சென்னை உள்ளிட்ட இடங்களில் விநாயகர் சதூர்த்திக்காக விநாயகரை பல்வேறு வடிவங்களில் தயாரிக்கின்றனர்.
விநாயகரை எந்த நிலையிலும் வழிபடலாம் என்பதால் ஒவ்வொரு ஆண்டும் அந்தந்த ஆண்டின் 'டிரென்டிற்கு' ஏற்ப கிரிக்கெட் விநாயகர், கம்ப்யூட்டர் விநாயகர், ரோபோ விநாயகர் என விதவிதமாக வடிவமைப்பது பேஷனாகி விட்டது. அந்த வகையில், 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை தரிசனம் தரும் அத்தி வரதரை போன்று, விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகிறது.
இதனை பற்றி சிலை தயாரிப்பாளர்கள் கூறுகையில், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வண்ணம், எளிதில் கரையும் வகையில், காகிதக் கூழ் கலவையை கொண்டு விநாயகர் சிலைகள் செய்யப்படுவதாக தெரிவிக்கின்றனர். அவர்கள் இந்த ஆண்டு பிரத்தியேக வடிவமாக விஷ்ணு விநாயகரையும், அத்தி வரத விநாயகரையும் அறிமுகப்படுத்தியுள்ளதாக கூறியுள்ளனர்.
மேலும், பக்தர்களுக்கு சிலை தயாரித்து தருவது இறைவனுக்கு செய்யும் சேவையாக பரம்பரை பரம்பரையாக செய்து வருவதாகவும் தெரிவிக்கின்றனர். சிலைகள் செய்வதற்கான மூலப்பொருட்களின் விலைகள் உயர்ந்துள்ள போதிலும், சிலைகளை குறைந்த விலைக்கு விற்பதால் நஷ்டம் அடைவதாக வேதனை தெரிவிக்கும் தயாரிப்பாளர்கள், குடிசைத் தொழிலாக அங்கீகரித்து அரசு மூலப் பொருட்கள் குறைந்த விலைக்கு கிடைப்பதற்கு உதவிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.