சாலையில் நடப்பது யார்னு பாருங்க.. இதனால்தான் இவர் ராஜா!!
திருவண்ணாமலை சாலையில் இளையராஜா நடந்து சென்றார்.
Recommended Video
திருவண்ணாமலை: அங்கே வேற யாராவது இருந்தால் எகிறி ஆட்டமே போட்டிருப்பார்கள்!! ஆனால் வந்தது இவராயிற்றே?!
திருவண்ணாமலை தீபத்திருவிழாவின் ஆறாம் நாள் அது. நகரெங்கும் தெரு தெருவாக போலீஸ் குவிக்கப்பட்டு இருக்கிறது. நேரம் மதியத்திற்கு மேல் ஆகிவிட்டது. கோயில் பக்கம் இருக்கிற அண்ணாசாலை அருகே ஒரு கார் வந்து நிற்கிறது.
உச்சக்கட்ட டென்ஷனில் இருந்த போலீசார், "ம்ஹூம்... இதுக்கு மேல போகக்கூடாது. பெர்மிஷன் கிடையாது. அப்படியே வண்டியை நிறுத்துங்க" என்று எச்சரிக்கிறார்கள். உடனே ஒருவர் காரிலிருந்து இறங்கி வந்து அந்த போலீசாரின் காதில் உள்ளே இருப்பவரை பற்றி சொல்கிறார்.
இசைஞானி
கொளுத்தும் வெயிலில் பந்தோபஸ்த்தில் கத்தி கொண்டிருந்த போலீசாரோ எதையுமே காதில் வாங்கவே இல்லை. உடனே அந்த கார் கதவு திறக்கிறது. காரில் உட்கார்ந்திருந்தவர் தெருவில் நடக்க ஆரம்பித்துவிட்டார். பளிச்சென வெள்ளை உடை உடுத்தி மக்களோடு மக்களாக நடந்து சென்று கொண்டே இருந்தவர் இசைஞானி இளையராஜாதான்.
ரோடில் இறங்கி நடந்தார்
எதை பற்றியும் கவலைப்படவில்லை.. யாரைப் பற்றியும் யோசிக்கவில்லை... பொதுமக்கள், நெரிசல், கூட்டம், தள்ளுமுள்ளு, வெயில், என ஒன்றை பற்றியும் சிந்திக்கவில்லை. ரோடில் நடந்து கொண்டே இருந்தார். அப்படி அவர் ரோடில் இறங்கி நடக்க ஆரம்பித்தவுடன்தான் போலீசாருக்கு தெரிந்தது காதில் ஒருத்தர் வந்து பேசிவிட்டு போனது.
வருத்தம் சொன்னார்கள்
தர்ம சங்கடமாக போய்விட்டது. இப்படியே நடந்து ரமணாஷ்ரமம் வரை சென்றுவிட்டார் இளையராஜா. விஷயம் காவல்துறை மேலிடத்துக்கு பறந்தது. தகவலறிந்து ஓடிவந்தார் அவர். பெரிய தவறு செய்துவிட்டதுபோல புழுங்கினார். பிறகு காத்திருந்து இசைஞானியை நேரில் சந்திந்து வருத்தம் சொன்னார்கள்.
எளிமையையே சுவாசித்தவர்
ஆனால் இதையெல்லாம் இளையராஜா ஒரு பிரச்சனை ஆக்குவாரா என்ன? எளிமையிலேயே பிறந்து, எளிமையையே பருகி... எளிமையையே சுவாசித்த இளையராஜா இதுபோன்ற விஷயங்களை எப்படி பெரிதுபடுத்துவார்? இதுவே கட்சிக்காரர்களாக இருக்கட்டுமே? அந்த அண்ணாசாலை அந்நேரம் என்னாயிருக்குமோ தெரியாது!!