ஜெயலட்சுமி செய்த காரியத்தை பார்த்தீங்களா.. அப்படியே உறைந்து போன போலீஸ்..!
லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரி கைது செய்யப்பட்டார்
கள்ளக்குறிச்சி: தான் ஒரு பெண் அதிகாரி என்பதைகூட மறந்துவிட்டு, ஜெயலட்சுமி லஞ்சம் வாங்கி உள்ளார்.. அதுவும் வெறும் 1500 ரூபாய்.. இப்போது கையும் களவுமாக சிக்கி.. கைதாகி ஜெயிலில் இருக்கிறார்!
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலத்தை அடுத்துள்ளது தாகம் தீர்த்தாபுரம் என்ற கிராமம்... இங்கு வசித்து வருபவர் ராமலிங்கம்.. இவர் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர். தன்னுடைய மகள் கல்யாணத்திற்காக, திருமண உதவித் தொகைக்காக விழுப்புரம் மாவட்ட கலெக்டர் ஆபீசில் சமூக நலத்துறையிடம் மனு தந்துள்ளார்.
ஆனால், அந்த மனு அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது போல தெரிகிறது.. அதனால் அதை பற்றி விசாரிக்கவும், மனு மீதான நடவடிக்கை எடுக்க கோரவும், சமூக நல விரிவாக்க அலுவலர் ஜெயலட்சுமியை சந்தித்துள்ளார். அதற்கு ஜெயலட்சுமி, அந்த மனுவுக்கு பரிசீலனை செய்ய 1500 ரூபாய் லஞ்சம் வேண்டும் என்று கேட்டுள்ளார்.
இதை கேட்டு அதிர்ந்து போன ராமலிங்கம், சரி பணத்தை தருகிறேன் என்று சொல்லிவிட்டு, விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் தந்துவிட்டார்.. லஞ்ச ஒழிப்பு போலீசாரும், ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை ராமலிங்கத்திடம் தந்து அனுப்பினர்.
அந்த பணத்தை எடுத்து கொண்டு, ராமலிங்கம் கலெக்டர் ஆபீஸ் சென்று ஜெயலட்சுமியிடம் தந்தார்.. அதை ஜெயலட்சுமி வாங்க முற்பட்டபோது, மறைந்திருந்த விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசார், கையும் களவுமாக லபக்கென ஜெயலட்சுமியை பிடித்துவிட்டனர்.. போலீசாரை பார்த்ததும் மிரண்டு போய்விட்டார் ஜெயலட்சுமி..
அவரிடம் துருவி துருவி விசாரணை மேற்கொண்டதில், இந்த 2 நாளில் மட்டும் 70 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கி இருக்கிறாராம் ஜெயலட்சுமி.. இதை கேட்டு ஆடிப்போன போலீஸ், அவரிடம் இருந்து முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றி உள்ளனர்.. தொடர் விசாரணையும் நடந்து வருகிறது.