தாடி கருப்பாக இருந்த போதே நான் அரசியலுக்கு வந்திருக்க வேண்டும்.. கமல்ஹாசன் வருத்தம்
திருவண்ணாமலை: எனது தாடி கருப்பாக இருந்த போதே நான் வந்திருக்க வேண்டும் என கமல்ஹாசன் தெரிவித்தார்.
திருவண்ணாமலையில் அவர் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் ராமகிருஷ்ணா ஹோட்டலில் பேசினார்.
அவர் கூறுகையில் ரொம்ப நேரமாக பேசாமல் வந்து கொண்டிருக்கிறோம். ஏனென்றால் பேச எங்களுக்கு அனுமதி இல்லை, அனுமதி கிடைத்தால் குரல் எழ மாட்டேன் என்கிறது, நா தழுதழுக்கிறது. அதற்கு காரணம் வரும் வழியெல்லாம் நான் சந்தித்த அன்பு. அவர்களின் எதிர்பார்ப்பு, தன்னம்பிக்கையையும் திமிரையும் கொடுப்பதற்கு பதிலாக பொறுப்பை கொடுத்துள்ளது.
கோட்டை
நாங்கள் வெற்றியை நோக்கி செல்ல வேண்டும் என நினைத்துக் கொண்டு வந்தோம். ஆனால் இங்கு நீங்கள் செலுத்தும் அன்பை பார்க்கும் போது எங்களை தோள் மீது தூக்கிக் கொண்டு கோட்டையில் உட்கார வைத்துவிடுவீர்கள் போல் இருக்கிறது.
மன்னித்துவிடுங்கள்
ஏற்கெனவே 60 ஆண்டுகளாக எனக்கு புகழை கொடுத்துவிட்டீர்கள். இன்னும் புகழ், இன்னும் புகழ் என அலைவதில் அர்த்தம் கிடையாது. இன்னும் அன்பு, இன்னும் பொறுப்பு என்றுதான் சொல்ல வேண்டும். ஏன் தாமதமாக வந்தீர்கள் என சொல்வதற்கு என்னை மன்னித்துவிடுங்கள் என சொல்வதை தவிர வேறு எதுவும் இல்லை.
முடி கருப்பு
இந்த தாடி கருப்பாக இருந்த போதே நான் வந்திருக்க வேண்டும். உங்களில் பலரின் தலை கருப்பாக இருந்த போதே நீங்களும் இதே கோபத்துடன் அரசியலுக்கு வந்திருக்க வேண்டும். சினிமா எடுப்பதில் கூட இந்த அரசு இடையூறு செய்தது. இதை தேர்தல் காலத்திற்காக கையில் எடுக்கும் ஒரு ஆயுதம் இல்லை. இது பலருக்கு நிகழ்ந்து கொண்டிருக்கிறது. எனக்கு பல வருடங்களாக நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
ஏழைகள்
பெரிய பணக்காரர்கள் முதல் ஏழைகள் வரை எல்லாரையும் ஒரே மாதிரி தாக்குகிறது இந்த அரசியல். இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும். தமிழகத்தின் பொருளாதாரத்தை 1 டிரில்லியனாக மாற்றும் உறுதிமொழியுடன் நாங்கள் இங்கு வந்திருக்கிறோம். இப்போது இருக்கும் நிலையிலிருந்து 4 மடங்கு அதிகரிக்க முடியும்.
தொழில்கள்
நேர்மையாளர்கள் ஆட்சி கட்டிலில் அமர்ந்தால் அதில் மிஞ்சும் பணத்தை வைத்து இரு தமிழகங்களை செழிப்பாக வைக்கலாம். 7 அம்ச திட்டங்களை நாங்கள் இனி வாரா வாரம் சொல்லவுள்ளோம். பெரிய நிறுவனங்களும் நடக்க வேண்டும், சிறு குறு தொழில்களும் நடக்க வேண்டும். இளைஞர்கள் படிப்பு முடிந்து வெளியே வந்து வேலைக்காக அலையும் தொழிலாளர்களாக இல்லாமல் இருக்க வேண்டும்.
ஆட்சி
எங்கள் கட்சி பன்முகத் திறமை கொண்ட கட்சியாக உள்ளது. எப்படிப்பட்ட ஆட்சியை விரும்புகிறீர்கள் என நீங்கள் சொன்னால் அப்படிப்பட்ட ஆட்சியை கொடுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். விவசாயிகளுக்கு கொடுக்கக் கூடிய நலத்திட்டங்கள் எல்லாம் பெண் விவசாயிகளையும் சென்றடைய வேண்டும். விவசாயியின் மகளுக்கும் நலத்திட்டங்கள் கொடுக்க வேண்டும். இந்தியாவின் தலைவாசலாக தமிழகம் திகழ வேண்டும் என்றார் கமல்ஹாசன்.