திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா - பந்தக்கால் முகூர்த்தம்
நினைத்தாலே முக்தி தரும் அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா பந்தக்கால் முகூர்த்தத்துடன் தொடங்கியுள்ளது. கார்த்திகை தீபத்திருவிழா டிசம்பர் 10ஆம் தேதி அண்ணாமலையார் கோவிலில் மகாதீபம் ஏற்றப்படு
திருவண்ணாமலை: பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆண்டு தோறும் கார்த்திக்கை தீபத்திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத்திருவிழா நவம்பர் 28ஆம் தேதி தொடங்குகிறது. டிசம்பர் மாதம் 10ஆம் தேதி அதிகாலையில் பரணி தீபமும் மாலையில் மகாதீபமும் ஏற்படுகிறது. இந்த விழாவிற்காக பூர்வாங்க பணிகள் தொடங்குவதற்கான பந்தக்கால் முகூர்த்தம் திங்கட்கிழமை நடைபெற்றது.
நினைத்தாலே முக்கி தரும் திருவண்ணாமலையில் மலையே சிவனாக வணங்கப்பட்டு வருகிறது. பவுர்ணமி மற்றும் கார்த்திகை தீப நாட்களில் பல லட்சம் பக்தர்கள் மலையை சுற்றி கிரிவலம் செல்கின்றனர். சிவபெருமான் அக்னி பிழம்பாக காட்சி கொடுத்ததால் திருவண்ணாமலை மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுகிறது.
திருமாலுக்கும், பிரம்மனுக்கும் இடையே யார் பெரியவர் என்ற போட்டியில் அடிமுடி காண முடியாத அக்னி பிழம்பாக காட்சியளித்ததாக ஐதீகம். அந்த நாளே கார்த்திகைதீப திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத்திருவிழா நவம்பர் 28ஆம் தேதி தொடங்கி டிசம்பர் மாதம் 14ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த விழாவிற்காக பூர்வாங்க பணிகள் தொடங்குவதற்கான பந்தக்கால் முகூர்த்தம் நேற்று அதிகாலை 5.30 மணியில் இருந்த 7 மணிக்குள் நடைபெற்றது.
இதையொட்டி கோவிலில் உள்ள சம்பந்த விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், தங்க கவச அலங்காரம், பந்தக்காலுக்கும் புனிதநீர் ஊற்றி அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் கோவில் பிச்சகர் ரகு பந்தக்காலை கோவில் ராஜகோபுரம் வரை சுமந்து வந்தார். அதைத் தொடர்ந்து பந்தக்காலிற்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டு பந்தக்கால் நடப்பட்டது.
கார்த்திகை 24 ஆம் தேதி டிசம்பர் 10ஆம் நாள் அதிகாலையில் பரணி தீபம் ஏற்றப்படும். அன்றைய தினம் மாலையில் மலைமீது மகா தீபம் ஏற்றப்பபடுகிறது.
மகாதீபம் ஏற்றப்படும் நாளில் திருவண்ணாமலை மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் வசிப்பவர்கள் தீபம் ஏற்றும் வரை தங்கள் வீடுகளிலோ, வியாபார நிறுவனங்களிலோ மின்விளக்கு போடமாட்டார்கள். மாலை 6 மணிக்கு மகாதீபம் ஏற்றிய பிறகே விளக்கு போடுவார்கள். மேலும் தங்கள் வீடுகளிலும், வீடுகளின் முன்பும் அகல்விளக்கு ஏற்றி வழிபடுவார்கள். இதனால் திருவண்ணாமலை நகரமே ஒளிவெள்ளத்தில் காட்சியளிக்கும். மகாதீபம் ஏற்றியதும் திருவண்ணாமலை மற்றும் சுற்றுப்புற கிராமங்களிலும் உள்ள பொதுமக்கள் வீடுகள் மற்றும் வியாபார நிறுவனங்களில் அகல் விளக்கு ஏற்றி மலையை நோக்கி வழிபடுவார்கள்.