திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழா இன்று கொடியேற்றம் - 29ல் மகாதீபம்
திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழா தங்கக் கொடிமரத்தில் இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருவண்ணாமலை: கார்த்திகை தீபத்திருவிழா திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் தங்கக் கொடிமரத்தில் இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. பக்தர்கள் தீபத்திருவிழாவில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
சிவபெருமானின் பஞ்ச பூதத்தலங்களில் திருவண்ணாமலை தலம் நெருப்பு தலமாக பக்தர்களால் போற்றப்படுகிறது. இங்குள்ள மலையே சிவபெருமானாக வணங்கப்படுகிறது. அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நட்சத்திரமும், பெளர்ணமியும் இணைந்து வரக்கூடிய நன்னாளில் மலை மீது திருக்கார்த்திகை தீபம் ஏற்றப்படும்.
இந்தாண்டிற்கான கார்த்திகை தீப திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. அண்ணாமலையார் சன்னதி அருகே 64 அடி உயரம் கொண்ட தங்க கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பத்து நாட்கள் காலையும், மாலையும் கோவிலில் உள்ள ஐந்தாம் பிரகாரத்தில் சுவாமி வீதி உலா நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கார்த்திகை தீப திருவிழாவின் முக்கிய நிகழ்வான பரணி தீபம் மற்றும் மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நவம்பர் 29ஆம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் அதிகாலை திருக்கோவில் கருவறையின் முன்பு நான்கு மணிக்கு பரணி தீபமும், அதனைத் தொடர்ந்து மாலை ஆறு மணிக்கு 2,668 அடி உயரம் கொண்ட மலையின் மீது மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.
ஆண்டுதோறும் கார்த்திகை மகா தீபத்தை காண லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் ஒன்று திரள்வார்கள். இந்தாண்டு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பரணி தீபம் மற்றும் மகாதீப விழாவில் பக்தர்கள் பங்கேற்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.