திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் துவங்கிய தேரோட்டம்.. ‛‛அரோகரா’’ கோஷம்.. பக்தர்கள் பரவசம்
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபதிருவிழாவின் 7 ம் நாளான இன்று மகாரத தேரோட்டம் துவங்கியது. முதலாவதாக ‛அரோகரா' கோஷத்துடன் விநாயகர் தேரை பொதுமக்கள் வடம்பிடித்து இழுத்தனர். இதன் தொடர்ச்சியாக முருகர் தேர், அண்ணாமலை தேர், சண்டிகேஸ்வரர் தேர் என இரவு வரை தேரோட்டம் நடைபெற உள்ளது.
திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலாக கருதப்படும் அருணாச்சலேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் 10 நாட்கள் திருக்கார்த்திகை தீப திருவிழா கொண்டாப்படும்.
சிந்தனையில் மாற்றம், சமூகத்தில் ஏற்றம்.. உலக மாற்றுத்திறனாளிகள் தினம்.. முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
இந்த ஆண்டுக்கான கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 27 ம் தேதி கொடியேற்றுடன் துவங்கியது. வேதமந்திரங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் கோவிலில் உள்ள 67 அடி உயர தங்க கொடிமரத்தில் கொடியை ஏற்றினர்.
வெள்ளி தேரோட்டம்
இதையடுத்து முதல் 5 நாட்கள் மாடவீதியுலாக்கள் நடந்தன. காலையில் சந்திரசேகரர் மாலையில் விநாயகர், முருகர், அண்ணாமலையார் உண்ணாமலையம்மன், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகள் திருக்கோயிலின் ஐந்தாம் பிரகாரத்தை சுற்றி வலம் வருகிறார்கள். இதில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். நேற்று கோவிலில் வெள்ளி தேரோட்டம் நடந்தது. 6ம் நாளான நேற்று காலை 11 மணிக்கு விநாயகர் மர யானை வாகனத்தில் எழுந்தருளினார். சந்திரசேகரர் வெள்ளி யானை வாகனத்தில் எழுந்தருளினார். சாமிக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடந்த நிலையில் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
துவங்கிய தேரோட்டம்
இந்த 10 நாள் விழாவில் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான மகாரத தேரோட்டம் இன்று நடக்கிறது. அதன்படி இன்று காலை 7 மணிக்கு விநாயகர் தேரோட்டம் துவங்கியது. பக்தர்கள் வடம்பிடித்து அரோகரோ கோஷத்துடன் தேரை இழுத்தனர். இதையடுத்து காலை 9 மணிக்கு முருகர் தேர் வலம் வர உள்ளது. இந்த 2 தேர்களும் நிலையை அடைந்த பிறகு பெரிய தேர் என கூறப்படும் அண்ணாமலையார் தேரோட்டம் துவங்க உள்ளது. இந்த அண்ணாமலையார் தேரோட்டம் மதியம் துவங்கி நடைபெற உள்ளது. இந்த தேரோட்டத்தின்போது ஆண்களும், பெண்களும் தனித்தனி பக்கங்கள் வடத்தை பிடித்து தேரை இழுக்க உள்ளனர்.
இரவு வரை தேரோட்டம்
பெரிய தேரான அண்ணாமலையார் தேர் நிலையை அடைந்த பிறகு சண்டிகேஸ்வரர் தேரை சிறுவர், சிறுமிகள் வடம்பிடித்து இழுப்பார்கள். இந்த தேரோட்டத்தில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து பல ஆயிரம் பேர் பங்கேற்க வாய்ப்புள்ளது. காலை முதல் இரவு வரை தேரோட்டம் நடைபெற உள்ளது. இதனால் ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன. கண்காணிப்பு பணிக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளன. கொரோனா பரவலால் 2 ஆண்டுகளுக்கு பிறகு இன்று தேரோட்டம் களைகட்டி உள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மகாதீபம் எப்போது?
மேலும் கார்த்திகை தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக பரணி தீபம் , அண்ணாமலையார் தீபம் (மகா தீபம்) விஷ்ணு தீபம், உள்ளிட்ட 5 தீபங்கள் ஏற்றப்படும். இது டிசம்பர் 6ல் நடக்கிறது. அன்று அதிகாலை பரணி தீபம் அண்ணாமலையார் கருவறையில் ஏற்றப்பட்டு, பின்னர் அர்த்த மண்டபத்தில் ஐந்து தீபங்களாக காட்டப்படும். இதன் தொடர்ச்சியாக டிசம்பர் 6ம் தேதி அண்ணாமலையார் தீபம் (மகா தீபம்) விஷ்ணு தீபம், உள்ளிட்ட 5 தீபங்கள் ஏற்றப்படும். அன்று அதிகாலை பரணி தீபம் அண்ணாமலையார் கருவறையில் ஏற்றப்பட்டு, பின்னர் அர்த்த மண்டபத்தில் ஐந்து தீபங்களாக காட்டப்படும். அதன்பிறகு அன்று மாலை 6 மணிக்கு, சிவனே மலையாக காட்சி தரும் 2,668 அடி உயர மலை உச்சியின் மீது மகா தீபம் ஏற்றப்படும். மலை உச்சியில் 5 அடி உயரம், 250 கிலோ எடை கொண்ட கொப்பரையில் 3500 லிட்டர் நெய் மற்றும் ஆயிரம் மீட்டர் காடா துணிகள் பயன்படுத்தப்பட்டு மகாதீபம் ஏற்றப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.