அதிமுகவை பலவீனப்படுத்த பாஜக அரசு முயற்சி... சசிகலா மீது கரிசனம் காட்டும் கே.எஸ்.அழகிரி..!
திருவண்ணாமலை: சசிகலாவை ஆயுதமாக வைத்து அதிமுகவை பலவீனப்படுத்தும் நடவடிக்கைகளில் மத்திய பாஜக அரசு ஈடுபட்டு வருவதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் பிரச்சார சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ள அவர் திருவண்ணாமலையில் செய்தியாளர்களை சந்தித்த போது இதனைத் தெரிவித்தார்.
சசிகலா மீது பரிவு காட்டும் வகையில் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ள இந்தக் கருத்து அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
ஆன்லைன் வகுப்பு...மன அழுத்தம்... வழிகாட்டுதல் தேவை...எம்பி கனிமொழி பதிவு!!
தேர்தல் பிரச்சாரம்
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கடந்த மாதம் திருப்பூர் மாவட்டத்தில் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணத்தை தொடங்கிய நிலையில் மாவட்ட வாரியாக சென்று நிர்வாகிகளை சந்தித்து பேசி வருகிறார். அந்த வகையில் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வந்த அவர் அந்த மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமான தொகுதி பற்றியும் வாக்காளர் விவரங்களையும் கேட்டறிந்தார்.
அதிமுக பலவீனம்
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், சசிகலாவை ஒரு ஆயுதமாக வைத்து அதிமுகவை தொடர்ந்து பலவீனப்படுத்தும் நடவடிக்கைகளில் மத்திய அரசும், பிரதமர் மோடியும் ஈடுபட்டு வருவதாக குற்றஞ்சாட்டினார். மேலும், இது தவறான போக்கு என்றும் குழப்பங்களை விளைவித்து அரசியல் செய்ய நினைக்கும் நடவடிக்கை எனவும் கே.எஸ்.அழகிரி விமர்சித்துள்ளார்.
திடீர் கரிசனம்
திமுக கூட்டணியில் காங்கிரஸ் அங்கம் வகித்து வரும் நிலையில் அதிமுக பலவீனம் அடைவது பற்றியும் சசிகலா மீது பரிவு காட்டும் வகையிலும் அழகிரி கருத்து தெரிவித்திருப்பது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. திமுக கூட்டணியில் இந்த முறை காங்கிரஸ் கட்சிக்கு மிக சொற்ப எண்ணிக்கையில் சீட் வழங்கப்படும் எனக் கூறப்படும் சூழலில் அழகிரியின் இந்தக் கருத்து அரசியல் வட்டாரத்தில் ஆயிரம் கேள்விகளை எழுப்புகிறது.
2014 முதல்
இதனிடையே நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்பு கொரோனா காரணமாக மட்டும் ஏற்படவில்லை என்றும் மத்திய பாஜக அரசின் தவறான கொள்கைகள் மற்றும் செயல்பாடுகளால் 2014-ம் ஆண்டு முதல் நாட்டின் வளர்ச்சி கடும் சரிவை சந்தித்து வருவதாக அழகிரி தெரிவித்துள்ளார்.