ஒரு போன் பண்ணுனா போதும்.. வீட்டுக்கே நேரில் வந்து இலவச சிகிச்சை.. செய்யாறில் புதுமையான திட்டம்
திருவண்ணாமலை: போன் செய்தால் போதும் வீட்டுக்கே நேரில் வந்து இலவச சிகிச்சை அளிக்கும் புதுமையான திட்டம் செய்யாறில் தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்திலேயே முதல்முறையாக இந்த வசதி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தொடங்கி உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே உள்ள கிராமம் பெருங்கட்டூர். இங்கு மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது.
இந்த மருத்துவமனையில் தமிழகத்திலேயே முதல்முறையாக வீட்டுக்கே வந்து இலவச சிகிச்சை அளிக்கும் திட்டம் தொடங்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி 24 மணி நேரமும் செயல்படும் வகையில் 8925123450 என்ற தொலைப்பேசி எண்ணில் தொடர்பு கொண்டால் நேரில் சென்று சிகிச்சை அளிக்க மெடிகால் என்ற புதிய திட்டத்தை திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கே.எஸ். கந்தசாமி நேற்று செய்யாறில் தொடங்கி வைத்தார்.
இந்த திட்டம் குறித்து மாவட்ட ஆட்சியர் கே.எஸ். கந்தசாமி கூறுகையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் நீண்ட நாட்களாக மருத்துவமனைக்கு வர இயலாத நிலையில் 945 பேர் பாதிக்கப்பட்டு இருப்பதை கண்டறிந்துள்ளோம். இவர்கள் அனைவரும் இந்த திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டு வீட்டுக்கே சென்று சிகிச்சை அளிக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் எந்த மூலையில் இருந்தாலும் வீடு தேடி சென்று சிகிச்சை அளிக்கப்படும்.
இதுமட்டுமின்றி திருவண்ணாமலை மட்டுமில்லாமல், தமிழத்தின் எந்த பகுதியில் இருந்த போன் செய்தாலும் அந்தந்த மாவட்டத்திற்கு தெரிவிக்கப்பட்டு நடமாடும் மருத்துவ குழு மூலம் உடனடியாக சிகிக்சை அளிக்கப்படும்" இவ்வாறு ஆட்சியர் கூறினார்.