1.32 கோடி இளைஞர்கள்.. தமிழ்நாட்டில் வேலையில்லாமல் தவிக்கிறார்கள்.. அன்புமணி ராமதாஸ் விமர்சனம்!
திராவிட மாடல் ஆட்சியில் இளைஞர்கள் வேலையில்லாமல் தவிப்பதாக அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.
திருவண்ணாமலை: திராவிட மாடல் ஆட்சியில் 1.32 கோடி இளைஞர்கள் வேலையில்லாமல் தவித்து வருவதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார். அதேபோல் மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு என்று நிதி ஒதுக்கவில்லை என்று விமர்சித்த அன்புமணி ராமதாஸ், தேர்தல் நடக்கவுள்ள மாநிலங்களுக்கு மட்டும் அதிகளவிலான நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு மாங்கால் கூட்ரோடு பகுதியில் பாட்டாளி மக்கள் கட்சியின் 2.O விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்துகொண்டார்.
இந்த கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசுகையில், தமிழ்நாட்டில் சிப்காட்டிற்கு நிலம் கொடுத்த உள்ளூர் இளைஞர்களுக்கு 80 சதவிகித வேலை வாய்ப்பு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
கருணாநிதி மீது நாங்க அளவுகடந்த அன்பு வச்சிருந்தோம்! அதற்காக..? அன்புமணி வைத்த ட்விஸ்ட்!
பாமக மாடல்
தொடர்ந்து அன்புமணி ராமதாஸ் பேசுகையில், தமிழ்நாட்டில் குட்கா, போதைப் பொருட்களை தடை செய்ய வேண்டும். இளைஞர்களின் நலன் கருதி ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்க வேண்டும். இல்லையென்றால் மிகப்பெரிய போராட்டத்தை பாமக கையில் எடுக்கும். தற்போதைய அரசுக்கு புதிய கல்வி திட்டம், வேலை வாய்ப்பு உருவாக்குவது உள்ளிட்டவைகள் குறித்து எதுவும் தெரியாமல் இருக்கிறது.
நீர் மேலாண்மை
தமிழ்நாட்டில் படித்த இளைஞர்கள் 1 கோடியே 32 லட்சம் பேர் வேலையில்லாமல் தவித்து வருகின்றனர். இதற்கு காரணம் திராவிட மாடல் ஆட்சிதான். பாமக மாடல் ஆட்சியில் மாணவர்களின் படிப்புக்கு ஒரு பைசா கூட கட்டணம் செலுத்த தேவையில்லை. இலவச உயர்தர மருத்துவ சேவை அளிக்கப்படும். பாமக மாடல் ஆட்சியில் முதல் கட்டமாக ஒரு லட்சம் கோடி ரூபாயை தமிழ்நாட்டின் நீர் மேலாண்மைக்கு ஒதுக்கி அனைத்து ஆறுகளிலும் தடுப்பணை கட்டி வருங்கால சந்ததியினருக்கு வளமான மாநிலத்தை விட்டுச்செல்லும் என்று தெரிவித்தார்.
அன்புமணி ராமதாஸ் பேட்டி
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அன்புமணி ராமதாஸ் கூறுகையில், மத்திய பட்ஜெட்டில் நாடு முழுவதும் புதிதாக 157 நர்சிங் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று தெரிவித்துள்ளதை வரவேற்கிறேன். விவசாயிகளுக்கு கடன் கொடுப்பதற்காக ரூ.20 லட்சம் கோடியும், ரயில்வே திட்டங்களுக்கு ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் கோடியும் ஒதுக்கியுள்ளதை வரவேற்கிறேன்.
தமிழ்நாட்டிற்கு நிது ஒதுக்கவில்லை
ஆனால் நூறு நாள் வேலை திட்டத்திற்கு கடந்த ஆண்டு ரூ.89 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டில் ரூ.62 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 30 சதவிகிதம் வரை நிதி ஒதுக்கீடு குறைந்துள்ளது. அதேபோல் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. மத்திய அரசு 6 மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கியுள்ள நிலையில் தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்கவில்லை.
கல்வித்துறை போதாது
தேர்தல் நடக்கவுள்ள மாநிலங்களுக்கு மட்டும் அதிகளவிலான நிதியை ஒதுக்கியுள்ளனர். தமிழ்நாட்டிற்கு கூடுதலாக நிதி ஒதுக்க வேண்டும். சுகாதாரத்துறைக்கு ரூ.89 ஆயிரம் கோடி, கல்வித்துறைக்கு ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் கோடி ஒதுக்கியுள்ளது போதுமானதாக இருக்காது. பட்ஜெட்டில் சில திட்டங்கள் வரவேற்கத்தக்க வகையிலும், சில திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி போதுமானதாகவும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.